தேவைக்கு அதிகமாக நேரம் வீணடிப்பு.. அதிமுக வழக்கில் ஹைகோர்ட் அதிருப்தி.. சிபிசிஐடிக்கு அதிரடி உத்தரவு
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் புகுந்து முக்கிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரத்தில், விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தது. அதே வேளையில், ஓ பன்னீர்செல்வம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் சென்றதால் அங்கு மோதல் எழுந்ததாகவும், மேலும் அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எடுத்து சென்று விட்டதாகவும் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவும் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.வி சண்முகம் தாக்கல் செய்த மனுவில், அதிமுக தலைமை அலுவலகத்தில் சொத்து பத்திரங்கள், கம்ப்யூட்டர்கள், 37 வாகன ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் எடுத்து சென்று விட்டதாகவும் இது தொடர்பாக புகார் அளித்ததாகவும் ஆனால் இந்த புகாரை காவல்துறையினர் உரிய முறையில் விசாரிக்கவில்லை எனவும், ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டு வருவதாகவும் இந்த புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் அதிமுக தலைமை அலுவலகம் கலவரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி கடந்தாண்டு தமிழக டிஜிபி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சி. வி சண்முகம் தரப்பில் வழக்கறிஞர் முகமது ரியாஸ் ஆஜராகி, இந்த வழக்கின் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என தெரிவித்தார்.
சிபிசிஐடி தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்து மீரான், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றியதாகவும், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் மீது வழக்கு பதியபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது. ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 40 பேர் முன்ஜாமின் வாங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
116 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர். விசாரணைகள் முறையான கோணத்தில் நடைபெற்று வருவதால், வழக்குகள் குறித்த விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தேவைக்கு அதிகமாகவே தனது நேரத்தை வீணடித்திருப்பதாக அதிருப்தி தெரிவித்தார். மேலும் நீதிபதி, காவல்துறை தனது பணியை செய்யட்டும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, வழக்கின் நிலை குறித்த அறிக்கையை நான்கு வாரத்திற்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications