அத்துமீறும் இலங்கை.. தொடரும் மீனவர்கள் கைது.. நீதிமன்றத்தில் பரபர வாதம்..! மத்திய அரசு சொன்ன பதில்!
சென்னை: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இப்படி கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் பதிலையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் தான் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர் என்றாலும் அவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

ஜூலை மாதத்தில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஒன்றாம் தேதி தனுஷ்கோடி மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பே மேலும் 13 மீனவர்களை கைது செய்துள்ளது. தனுஷ்கோடி மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டியும் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த கைது நிகழ்வு நடந்திருக்கிறது.
மீன்பிடித்தடைக் காலம் முடிந்து தமிழக மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்கச் சென்று இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், இதுவரை 74 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெரும்பான்மையினர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அதுமட்டுமின்றி, தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 169 விசைபடகுகளை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால், அவற்றை நம்பியுள்ள மீனவக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றன.
இப்படி இருக்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. குறிப்பாக கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களை, இலங்கை கடற்படையினர் ஜனவரி 22ம் தேதி கைது செய்தனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுககும்படி, ஒன்றிய - மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மவுரியா, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருவதாகவும், நேற்று கூட இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முயன்ற போது படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், அதனால் இந்தியா - இலங்கை கூட்டு நடவடிக்கை குழுவின் கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் வாதிட்டார்.
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், மீனவர்கள் கைது சம்பவங்களை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின், ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.
ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் மத்திய அரசின் நடவடிக்கையால் அவ்வப்போதைக்கு விடுவிக்கப்படுவதாகவும், மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண, இரு நாட்டு செயலாளர்கள் மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியா - இலங்கை கூட்டு நடவடிக்கை குழு, விரைவில் கூட்டம் கூட்டி இதுசம்பந்தமாக விவாதிக்க உள்ளதாகவும் விளக்கமளித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசின் வாதத்தை பதிவு செய்து, வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications