சிபிசிஐடிக்கு கூடுதல் அதிகாரம்.. போலீசாரின் துறைரீதியான புகாரை விசாரிக்கலாம்..அரசாணையின் முழுவிபரம்
சென்னை: தமிழ்நாடு காவல் துறையின் சிபிசிஐடி பிரிவினருக்கு கூடுதல் அதிகாரத்தை தமிழக அரசு வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி துறை ரீதியான புகார் தொடர்பான விசாரணையை சிபிசிஐடி பிரிவினர் விசாரிக்க உள்ளனர். மேலும் பணியிட மாற்றங்கள் தொடர்பான விவகாரங்களை கவனிப்பதற்காக தமிழக அளவிலும், சென்னை அளவிலும் ஒரு கமிட்டி அமைக்கப்பட உள்ளது.
தமிழக காவல் துறை டிஜிபியாக சைலேந்திர பாபு உள்ளார். இவர் தலைமையில் தான் தமிழக காவல் துறை இயங்கி வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக அரசின் அறிவுறுத்தலின்பேரில் காவல்துறையில் புதிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தான் காவல் துறையினருக்கு வாரந்தோறும் வாரவிடுப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இது தற்போது நடைமுறையில் உள்ள நிலையில் பணி நெருக்கடியால் சில இடங்களில் பின்பற்றப்பட முடியாத நிலை உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சத்தியமூர்த்தி பவன் அடிதடி குறித்து டெல்லிக்கு ரிப்போர்ட்.. என்ன நடக்கிறது தமிழ்நாடு காங்கிரசில்?
சிபிசிஐடிக்கு கூடுதல் அதிகாரம்
தமிழ்நாடு காவல்துறையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதில் ஒன்று தான் சிபிசிஐடி பிரிவு. இந்த நிலையில் தான் தற்பாது தற்போது சிபிசிஐடி பிரிவு போலீசாருக்கு கூடுதல் அதிகாரத்தை தமிழக அரசு வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு காவல்துறையில் துறை ரீதியான புகார்களை விசாரிக்க சிபிசிஐடிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பணி என்ன?
தமிழ்நாடு காவல்துறையின் சீர்த்திருத்த சட்டம் 2013ல் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் அதனடிப்படையில் சிபிசிஐடிக்கு இந்த கூடுதல் அதிகாரிகள் வழங்கப்பட்டுள்ளது. அரசாணையின்படி காவல்துறை பணியிட மாற்றங்கள் தொடர்பான விவகாரங்களை கவனிப்பதற்காக தமிழக அளவிலும், சென்னை அளவிலும் ஒரு கமிட்டி அமைக்கப்பட உள்ளது. மேலும் டிஜிபி அனுமதியுடன் துறை ரீதியான புகார்களை விசாரிக்க தேவையென்றால் ஓய்வு காவல்துறை உயரதிகாரிகளை விசாரணைக்கு பயன்படுத்தலாம் எனவும், விசாரணையை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பணியமைப்பு குழு
மேலும் தமிழ்நாடு காவல்துறையின் சீர்த்திருத்த சட்டம் 2013 திருத்தம் தொடர்பாக உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி வெளியிட்ட அறிவிப்பில், ‛‛ முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலில் தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த விதிகளின் படி தமிழ்நாடு மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஆண்டுக்கு ஒரு முறை கூட வேண்டும். இதன்கீழ் நிபுணர் குழுவும் அமைக்கப்படவுள்ளது. தமிழ்நாடு பணியமைப்பு குழுவின்படி மாநில அளவில் நிர்வாகம், சட்டம் ஒழுங்கு மற்றும் உளவுத்துறை ஆகிய 3 பிரிவுகளின் கூடுதல் டிஜிபிக்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். மண்டல அளவிலான குழுவிற்கு ஐஜி தலைவராக இருப்பார். மேலும் ஆயுதப்படை உள்பட பிற காவல் பிரிவுகளுக்கு தனியேயும், மாவட்டம், சரகம் வாரியாக தனியாகவும் குழு அமைக்கப்படும்.
சென்னையில் எப்படி?
சென்னை பெருநகர் காவல் துறையில் பெருநகர் குழு, மண்டல அளவிலான குழுக்கள், மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு நிலையில் உள்ள காவல் துறையினரின் பதவி உயர்வு மற்றும் பணி இட மாற்றம் தொடர்பாக இந்த குழு முடிவுகள் எடுக்கும். தமிழ்நாடு காவல் துறையின் கீழ் சிபிசிஐடியில் புகார் பிரிவு அமைக்கப்படும். இதில் ஓய்வு பெற்ற பணியாளர்களை பணிமர்த்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று இந்த விதிகளில் கூறப்பட்டுள்ளது.