அதிரடியாய் சென்ற சிபிசிஐடி! தடதடத்த அதிமுக அலுவலகம்! சூடுபிடிக்கும் விசாரணையால் ஓபிஎஸ்க்கு சிக்கல்?
சென்னை : ஜூலை 11ஆம் தேதி வானகரத்தில் பொதுக்குழு நடந்த போது அதிமுக அலுவலகத்தில் மோதல் சம்பவத்தில், அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட்ட சிபிசிஐடி போலீசார், மோதல் தொடர்பாக விரைவில் சம்மன் அனுப்பி விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தநிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் அருகே கடந்த 11-ம் தேதி ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
இதுதொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதிமுக அலுவலகம்
பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சீல் அகற்றப்பட்டு, இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் கட்சி அலுவலக சாவி ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அதிமுக அலுவலகத்தில் பழனிசாமி தரப்பு நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். இதனையடுத்து அதிமுக அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் அளித்திருந்தார்.

ஓ.பன்னீர்செல்வம்
அதில்," கடந்த 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த நாளில், தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம், ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தை பூட்டிவிட்டு, அனைத்து பணியாளர்களுடன் வானகரத்தில் பொதுக்குழு நடைபெறும் மண்டபத்துக்கு சென்றுவிட்டார். இதை அறிந்த ஓ.பன்னீர்செல்வம், 300 அடியாட்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆதரவாளர்களுடன் சேர்ந்து, அவ்வை சண்முகம் சாலையில் இருந்த அனைத்து வாகனங்களையும் அடித்து நொறுக்கியும், மக்களை தாக்கியும், கற்களை வீசியும் அலுவலகத்துக்குள் நுழைந்துள்ளனர்.

அலுவலகத்தில் கொள்ளை
அலுவலகம் பூட்டியிருப்பதை பார்த்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அடியாட்களுடன் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர், அலுவலகத்தை சூறையாடி, அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்கள், முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். குறிப்பாக அசல் பத்திரங்கள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தங்கக் கவசம் வங்கியில் வைக்கப்பட்டதற்கான அசல் ஆவணங்கள், பீரோவில் வைத்திருந்த ரூ.31 ஆயிரம் பணம், கணக்கு வழக்குகள் சம்பந்தமான விவரங்கள் அடங்கிய 2 கணினி, ஹார்டு டிஸ்க், 37 வாகனங்களின் அசல் பதிவு பத்திரம், தரை தளத்தில் உள்ள அனைத்து அறைகளின் சாவிகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்." என கூறியிருந்தார்.

சிபிசிஐடி
ஆனால் போலீசார் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், ஓபிஎஸ்ஸுக்கு எதிராக அளித்த இதுதொடர்பாக நாங்கள் அளித்த புகாரை சிபிஐ அல்லது பிற விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என சிவி சண்முகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பான 4 வழக்குகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்ததோடு, சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டார். மேலும் குழுவில் ஆய்வாளர்கள் லதா, ரம்யா, ரேணுகா, செல்வின் சாந்தகுமார் ஆகியோரும்இடம்பெற்றனர்.

நேரில் விசாரணை
இந்நிலையில் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான விசாரணை குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் கலவரம் தொடர்பான வீடியோ பதிவுகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில் இன்று சிபிசிஐடி அதிகாரிகள் அதிமுக அலுவலகத்தில் மோதல் சம்பவத்தில், அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட்டனர். இதனால் வழக்கின் விசாரணை அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது.

சம்மன் அனுப்ப திட்டம்
இந்நிலையில் கொள்ளை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் என வழக்கில் தொடர்புடைய அனைவரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்த டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான குழு முடிவு செய்துள்ளது. அதன்படி முதல்கட்டமாக ஓபிஎஸ் உட்பட 65 பேருக்கு தனித்தனியாக சம்மன் அனுப்பி நேரில் அழைக்க உள்ளனர். அதற்கான பணிகளை சிபிசிஐடி விசாரணை குழு செய்து வருகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications