‛பராசக்தி’ வெளியாவதில் சிக்கல்.. கூடுதலாக 15 ‛கட்’ செய்யக்கோரிய சென்சார் போர்டு! இயக்குநர் மறுப்பு
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‛பராசக்தி' திரைப்படம் ஜனவரி 10ம் தேதி வெளியாக உள்ளது. ஆனால் இன்னும் சென்சார் சான்று கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் இன்று திரைப்படத்தில் கூடுதலாக 15 இடங்களில் ‛கட்' செய்ய சென்சார் போர்டு கூறியுள்ளது. இதற்கு இயக்குநர் சுதா கொங்கரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ‛பராசக்தி' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‛பராசக்தி'. இந்த திரைப்படம் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கி உள்ளார். ஜனவரி 10ம் தேதி திரைப்படம் திரையரங்கங்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்னும் சென்சார் சான்று கிடைக்கவில்லை. மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்சார் போர்டு உறுப்பினர்கள் ‛பராசக்தி' திரைப்படத்தை பார்த்து சில காட்சிகளை நீக்க கூறினர். இதையடுத்து படக்குழு அதனை நீக்கி மீண்டும் சென்சார் போர்டுக்கு அனுப்பியது. திரைப்படத்துக்கு யூ/ஏ சான்று வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது சென்சார் போர்டு ஏற்கனவே நீக்கப்பட்ட காட்சிகளை தவிர இன்னும் கூடுதலாக 15 காட்சிகளில் ‛கத்தரி' போடும்படி கூறியுள்ளது. இதில் மாற்றம் செய்தால் அந்த திரைப்படத்தின் படைப்பின் சுவாரசியம் குறையும் என்று கூறப்படுகிறது. இதனால் இயக்குநர் சுதா கொங்கரா தரப்பில் அதனை நீக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி முதலில் நீக்கப்பட்ட காட்சிகளுடன் திரைப்படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்பி வைக்கும்படி படக்குழு கோரிக்கை வைக்க உள்ளது. இது நடக்கும் பட்சத்தில் ‛பராசக்தி' திரைப்படம் திட்டமிட்டப்படி ஜனவரி 10ம் தேதி வெளியாக வாய்ப்பு இருக்காது. ஏனென்றால் ஒரு திரைப்படம் மறுஆய்வு குழுவிடம் சென்றால் குறைந்தபட்சம் 2 - 3 வாரங்கள் வரை காலம் எடுக்கும் என்கின்றனர். இதனால் ‛பராசக்தி' திரைப்படத்துக்கும் ‛சென்சார்' சான்று பிரச்சனை கவலையை ஏற்படுத்தி உள்ளது. அதோடு திட்டமிட்டப்படி திரைப்படத்தை ஜனவரி 10ம் தேதிக்கு கொண்டு வருவதில் புதிய சிக்கல் உருவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications