அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி ஞானசேகரன் மனு.. விசாரணை ஒத்திவைப்பு!
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஞானசேகரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவுக்கு அரசு தரப்பு பதில் அளிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீண்டும் இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, பல்கலைக்கழக வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஞானசேகரன் என்பவர் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை விசாரிக்க 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அறிவித்தது. அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர் விசாரணையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது. அவருக்கு எதிராக, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதைத்தொடர்ந்து பாஜகவை சேர்ந்த வக்கீல் ஏ.மோகன்தாஸ் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், திமுக நிர்வாகியாக இருந்த ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை தமிழ்நாடு போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. இந்த வழக்குகளை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இந்த
வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளின் விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஞானசேகரன் மனு தாக்கல் செய்திருந்தார். தனது மனுவில், எவ்வித முகாந்திரமும் இல்லாமல் அவசர அவசரமாக சிறப்பு புலனாய்வு குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக அவர் கூறி இருந்தார்.
அல்லிகுளம் நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால் வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணைக்காக ஞானசேகரன் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஞானசேகரன் மனு மீது 7 ஆம் தேதி அரசு தரப்பு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications