நிலத்தடி நீருக்கு ரூ10,000 கட்டணமா? மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது.. நீர்வளத்துறை!
சென்னை: நிலத்தடி நீருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் என்ற மத்திய அரசின் உத்தரவு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது என்று தமிழ்நாடு நீர்வளத்துறை விளக்கமளித்துள்ளது.
மத்திய நிலத்தடி நீர் ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிவிப்பால் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. அதில், நீச்சல் குளம், சுரங்கத் திட்டங்கள், தொழிற்சாலைகள், தண்ணீர் விநியோகிப்பாளர்கள், குடியிருப்பாளர் நலச் சங்கங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் உட்பட அனைத்து நிலத்தடி நீர் பயன்பாட்டாளர்களும், ஜூன் 30ம் தேதிக்குள் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம், நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெற வேண்டும்.
அதற்கான விண்ணப்பம் அளிக்கும்போது ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். ஒருவேளை, மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம் தடையில்லா சான்று பெறாமல் தொடர்ந்து நிலத்தடி நீர் எடுக்கும் பயன்பாட்டாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த சில நாட்களாக இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், தனி வீடு வைத்திருப்போர், குடியிருப்புதாரர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே இதுகுறித்து தமிழக நீர் வளத்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். அதில், தமிழகத்தை சேர்ந்த பல நிறுவனங்கள் வெளிமாநிங்களில் தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களை நிர்வகித்து வரும் நிலையில், பொதுவான விளம்பரமாகவே இது கொடுக்கப்பட்டுள்ளது. 20 மாநிலங்களில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் ஆணையங்கள் இல்லாத நிலையில், அந்த மாநிலங்களில் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அப்பணியினை செய்து வருகிறது.
தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீர் ஆணையங்கள் நிலத்தடி நீர் குறித்த விவகாரங்களை கவனித்து கொள்ளும். மேலும், தமிழகத்தில் நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகள் தமிழக அரசினால் கையாளப்பட்டு வருகின்றன.
மத்திய அரசின் வழிகாட்டுதலோடு முறையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதனால் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் பொது அறிவிப்பு தமிழகத்திற்கு பொருந்தாது எனவும், மறு அறிவிப்பு வரும் வரை தற்போது உள்ள விதிமுறைகளே தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது