சென்னை உயர் நீதிமன்ற.. பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நியமனம்.. மத்திய சட்ட அமைச்சகம் அறிவிப்பு
சென்னை: அலகாபாத் உயர் நீதிமன்றம் நீதிபதி முனிஷவர்நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பொறுப்பேற்கும் வரை தலைமை நீதிபதியாக (பொறுப்பு) துரைசாமி பதவி வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி கடந்த 2021 ஜனவரி மாதம் 4 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.
கடந்த 10 மாதங்களாக அவர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில் பல வழக்கு விசாரணைகளில் அவர் வேகமாக விசாரணை நடத்தினார்

இடமாற்றம்
இந்தச் சூழலில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜியை இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் கொலிஜியம் கடந்த வாரம் பரிந்துரை செய்தது. சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை அளித்திருந்தது. இந்த திடீர் இடமாற்ற பரிந்துரைக்குப் பலரும் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

எதிர்ப்பு
இந்த இடமாற்ற பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 237 வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றம் கொலிஜியத்திற்கு கடிதம் எழுதினர். மேலும், இந்த பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மெட்ராஸ் பார் அசோசியேஷனில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமின்றி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் போராட்டத்தையும் நடத்தினர்.

பொறுப்பு தலைமை நீதிபதி
இருப்பினும், சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்யக் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். மேலும், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனிஷவர்நாத் பண்டாரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்தச் சூழலில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வரர் நாத் பண்டாரி பதவியேற்கும் வரை, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக (பொறுப்பு) மூத்த துரைசாமி பதவி வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உருக்கமான கடிதம்
முன்னதாக பிரிவு உபசரிப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் கிளம்பிய சஞ்ஜிப் பானர்ஜி, சக நீதிபதிகளுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "இந்தியாவிலேயே சென்னை வழக்கறிஞர்கள் சிறப்பானவர்கள். இதுநாள் வரை ஆதிக்க கலாச்சாரத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அதை முழுமையாகத் தகர்த்தெரிய என்னால் இயலவில்லை.இந்த அழகான மாநிலத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் கடன்பட்டுள்ளேன் எனது சொந்த மாநிலம் என 11 மாதங்களாகச் சொல்லிக் கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்" எனத் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications