மாற்றம் என்பது ஒரேநாளில் நிகழக்கூடியது அல்ல..இதற்காகவே உழைக்கிறோம்.. சென்னையில் முக ஸ்டாலின் பேச்சு
சென்னை: மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழக்கூடியது அல்ல. அதை நாமும் அறியதாவர்கள் அல்ல. மாற்றத்தை நோக்கித்தான் நாம் உழைக்கிறோம். அதனால் தான் சாதிகளின் பெயரால் தொடக்கூடாது, தெருவில் நுழையக்கூடாது, வீதிகளில் நுழையக் கூடாது என்பதெல்லாம் உடைத்து நொறுக்கபட்டு விட்டன. என்று தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் எழுதிய 'கலைஞர் மு.கருணாநிதி வரலாறு', மாநில திட்டக்குழுவின் துணை தலைவரான ஜெ.ஜெயரஞ்சன் எழுதிய 'திராவிடமும் சமூக மாற்றமும்' என்ற நூல்களை வெளியிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கருணாநிதியின் வாழ்க்கை மூலமாக தமிழ்நாட்டை பார்க்கும் வகையில் பன்னீர்செல்வனின் நூல் அமைந்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டின் வளர்ச்சியின் வழியாக திராவிட இயக்கத்தை பார்க்கக்கூடிய நூலாக ஜெயரஞ்சனுடைய நூலும் அமைந்திருக்கிறது. திராவிடம் என்றாலே சமூக மாற்றம்தான். சமூக மாற்றம் என்றாலே அது திராவிடத்தால் விளைந்ததுதான். தீண்டாமை என்ற அந்த ஆயிரம் ஆண்டு சமூக அழுக்கை ஒழிக்கத்தான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.

ஒரே நாளில் நிகழக்கூடியது அல்ல
சமூக சீர்திருத்தத்தை முன்வைத்து போராடிய தந்தை பெரியார் வழிவந்த அரசியல் கட்சிகள் பல்லாண்டுகளாக தமிழகத்தில் தீண்டாமை நீடிக்கவே செய்கிறது என்று தனது நூலில் 77-வது பக்கத்தில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழக்கூடியது அல்ல. அதை நாமும் அறியதாவர்கள் அல்ல. மாற்றத்தை நோக்கித்தான் நாம் உழைக்கிறோம்.

தெருவில் நுழையக்கூடாது
அதனால் தான் சாதிகளின் பெயரால் தொடக்கூடாது, தெருவில் நுழையக்கூடாது, வீதிகளில் நுழையக் கூடாது என்பதெல்லாம் உடைத்து நொறுக்கபட்டு விட்டன. கல்வியும் படிப்பும் வேலையும் பதவியும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கையில் லகானை செலுத்தும் அதிகாரத்தை கொடுத்துவிட்டது இதுதான் திராவிட இயக்கம் ஏற்படுத்தியிருக்கிற மாற்றம். கல்வி, வேலைகள், அரசாங்கம், அதிகாரம் , நிர்வாகம் அறிவு என பலவும் ஜனநாயகமயமானது.

மதசார்பற்ற அரசியலுக்கு..
இந்த முன்னோக்கிய பாய்ச்சலில் தான் சமூகம் ஜனநாயகமயமாக வேண்டும். திராவிட மாடல் கொள்கையில் அதனைத் தான் சொல்லியிருக்கிறோம். கல்வியில், தொழிலில், உள்கட்டமைப்பில் சிந்தனைகள் மட்டும் அல்ல சமூகத்திலும் சேர்த்து வளர்வதுதான் உண்மையான வளர்ச்சி என்று சொல்லியிருக்கிறோம். கலைஞர் பாணி சமூக நீதிக்கும் மதசார்பற்ற அரசியலுக்கு இனி ஆற்றல் அற்றுப்போகும் என்றும் 1991 ஆம் ஆண்டு துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி சொன்னதாக பன்னீர் செல்வம் எழுதியிருக்கிறார்.

ஏராளமான சிந்தனையாளர்கள் தேவை
கலைஞர் பாணி சமூகநீதிக்கும் மதசார்பின்மைக்கும் மாநில சுயாட்சிக்கும் மொழி இன உரிமைக்கும் என்றும் ஆற்றல் என்றும் அற்றுப்போகாது என்பதன் அடையாளம் தான் இன்றைய திராவிட மாடல் ஆட்சி. ஆற்றல் அற்றுப்போய்விடவில்லை என்பதன் அடையாளம் தான் இத்தகைய அடையாளங்கள். சுயமரியாதை, சமதர்ம அரசியல் எந்நாளும் உயர்த்திப்பிடிப்போம். இத்தகைய சிந்தனைகளை விதைக்கவும் உருவாக்கவும் ஏ.எஸ் பன்னீர் செல்வம் போல ஏராளமான சிந்தனையாளர்கள் தேவை. இதுபோன்ற புத்தகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் அதிகம் தேவை.

சேர்ந்து பணியாற்ற வந்திருக்கிறோம்
ஜெயரஞ்சன் ஏற்புரை ஆற்றும் போது நீங்கள் கட்டைளையிடுங்கள் என்று சொன்னார். கட்டளையிட வரவில்லை. உங்களோடு சேர்ந்து பணியாற்ற வந்திருக்கிறோம். அதேநேரத்தில் அன்பான வேண்டுகோளாக தமிழ் புத்தகங்களை ஆங்கிலத்திலும், ஆங்கில புத்தங்களை தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும். அதுதான் உங்களுக்கு இருக்கக் கூடிய பெரும் கடமை. இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications