கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும்.. அமைச்சர் பொன்முடி உறுதி!
சென்னை : மழை வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து சென்னை மக்களைக் காப்பாற்ற தடுப்பணைகள் கட்டப்படும் என அமைச்சர் பொன்முடி உறுதி அளித்துள்ளார்.
ஆற்றங்கரையோரங்களில் தடுப்புச் சுவர் எழுப்பப்படும் என்றும் கொசஸ்தலை ஆற்றில் தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மழை பாதிப்பால் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய அமைச்சர் பொன்முடி பின்னர் செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தார்.
ஓமிக்ரான் வைரஸ் பரவல் :12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம்
நீர்நிலைகள் நிரம்பின
தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகிறது. அதில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழையால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் நிரம்பிவிட்டன.
வெள்ளநீர் சூழ்ந்தது
பூண்டி நீர்த்தேக்கம் மற்றும் புழல் ஏரியில் அதிக அளவில் உபரி நீர் திறக்கப்பட்டதால் வட சென்னை பகுதியில் உள்ள மணலி புதுநகர், சடையன்குப்பம், பர்மா நகர், இருளர் காலணி உள்ளிட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை தமிழ்நாடு அரசு பூர்த்தி செய்து வருகிறது.
உயர்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு
இந்நிலையில் மணலி புதுநகரில் தமிர்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர், பொன்முடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அங்கு தேங்கியிருக்கும் தண்ணீரை முடிந்தவரை விரைவாக வெளியேற்றுமா உத்தரவு பிறப்பித்தார். பின்னர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்ட அமைச்சர் பொன்முடி அவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தடுப்பணைகள் கட்டப்படும்
சென்னை மக்களை வெள்ள பாதிப்புகளில் இருந்து காப்பாற்ற கொசஸ்தலை ஆற்றங்கரையோரத்தில் சுவர் எழுப்பப்படும் என தெரிவித்தார். மேலும் தேவையான இடங்களில் புதிய தடுப்பணைகளும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் இனி மழைக் காலங்களில் தண்ணீர் குடியிருப்புகளில் வராத அளவுக்கு நடவடிக்கை எடுப்பதற்காக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறினார். மேலும் தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு சென்று வசிக்குமாறு இருளர் இன மக்களுக்கு அறிவுரை வழங்கினார். இது மட்டுமின்றி மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக பேட்டியின்போது அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.