சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வரும் சூப்பர் வசதி.. டெஸ்ட் எடுத்த 13 நிமிடங்களில் கொரோனா ரிசல்ட்
சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 13 நிமிடங்களில் விரைவாக கொரோனா ரிசல்ட் சொல்லும் ஆர்டி-பிசிஆர் சோதனை சென்டர் அமைய உள்ளது.
வெளிநாடுகளுக்கு, குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் அங்கிருந்து ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போன்ற பிற நாடுகளுக்கு பயணம் செய்யும் பயணிகள் கொரோனா சான்றிதழ் காட்ட தேவையுள்ளது. அவர்களுக்கு இது உதவும்.
விமான நிலைய ஆணையம் ஜூலை 27, இது தொடர்பாக தமிழக அரசிடம் அனுமதி பெற்றுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அனுமதியையும் பெற்றுள்ளது.

வெளிநாடுகள் செல்வோர்
"இந்த பரிசோதனை வசதி வெளிநாடுகளில் செல்வோருக்கு ரொம்பவே உதவியாக இருக்கும். ஏனென்றால் சில நாடுகள், பயணிகளிடம், சமீபத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளை, கேட்கின்றன. அதாவது சில மணி நேரத்துக்கு முன்பாக பரிசோதனை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவை வற்புறுத்துகின்றன.

டி30 பரிசோதனை
வெளிநாடுகளுக்கு செல்வோர் விமான நிலையத்தில் இந்த பரிசோதனையை செய்து சான்றிதழைப் பெற்றுக் கொண்டால் அந்த நாடுகளில் இதை காட்டி எளிதாக பயணம் செய்யலாம். இது டி -30 என்று அழைக்கப்படுகிறது. பயணிகள் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் நெகட்டிவ் சர்டிபிகேட் தரப்பட்டிருக்க வேண்டும். ஐக்கிய அரபு அமீரகம் உட்பட சில நாடுகள் இதை கோருகின்றன." என்று சென்னை விமான நிலைய இயக்குனர் டாக்டர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

புதிய ஆய்வகம்
விமான நிலையத்திற்குள் ஏற்கனவே உள்ள வழக்கமான ஆர்டி-பிசிஆர் சோதனை ஆய்வகமும் இருக்கும். இந்த 13 நிமிட ரிசல்ட் தரும் விரைவு பிசிஆர் சோதனை வசதி புறப்படும் முனையத்தில் அமைக்கப்படும்.

கட்டணம் எவ்வளவு
விரைவான பிசிஆர் வசதிக்கான சோதனைக்கான கட்டணத்தை சென்னை விமான நிலையம் இன்னும் நிர்ணயிக்கவில்லை. இருப்பினும், தனியார் ஆய்வகங்களில் வழக்கமான பிசிஆர் சோதனையை விட அதிக கட்டணம் இருக்கும்.
பெங்களூரு விமான நிலையத்தில் இந்த வசதி ஏற்கனவே உள்ளது. அவர்கள் ஒரு சோதனைக்கு ரூ .4,000 வசூலிக்கின்றனர்.

சென்னை கட்டுப்பாடுகள்
சென்னையில் கொரோனா பரவல், அதிகரித்து வருவதால் தி நகர் உள்ளிட்ட 9 பகுதிகளில் உள்ள கடைகளை மூடுவதற்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து கெடுபிடிகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. எனவே இங்கே இருந்து வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை என்பது மிகவும் கட்டாயமாக்கப்படும் என்றும் தெரிகிறது. ஏற்கனவே கட்டாயமாக்கி உள்ள சில நாடுகளைத் தாண்டி புதிதாக பல நாடுகளும் பரிசோதனையை செய்திருக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

டெல்டா வைரஸ்
இந்தியாவில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் தற்போது அமெரிக்கா ஐரோப்பா உள்ளிட்ட பல பகுதிகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. வளைகுடா நாடுகளில் நான்காவது அலை உருவாகுவதற்கு இந்த வகை வைரஸ் காரணமாக உள்ளதாக உலக சுகாதார ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. எனவே அனைத்து நாடுகளும் கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகின்றன. எனவே இந்தியாவிலிருந்து செல்லும் பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications