அடுத்த 3 மணி நேரங்களில்.. சென்னை உட்பட 16 மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: வளிமண்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை மற்றும் நீலகிரி, கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு, சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, வேலூர், திருவண்ணாமலை, சேலம், திருப்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் அறிவித்தப்படி, இன்று மாலை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, தி.நகர், நுங்கம்பாக்கம், வடபழனி, அசோக் நகர், கே.கே.நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, அரும்பாக்கம், பிராட்வே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதேபோல், தாம்பரம், பல்லாவரம், மீனம்பாக்கம், திரிசூலம், மேடவாக்கம், மடிப்பாக்கம், பழவந்தாங்கல், ஆலந்தூர், கீழ்கட்டளை, சென்னை விமான நிலையம் உள்ளிடட்ட பல்வேறு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. திடீரென பெய்த இந்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்தது. இதனால், அலுவலகம் முடிந்து வீடு திரும்புவர்கள் உள்ளிட்டோரும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.