லோக்கல் ரவுடியுடன் தகராறு! தூக்கியடிக்கப்பட்ட பிஎஸ்ஒ ! சென்னை பாஜக பிரமுகர் கொலையின் பரபர பின்னணி
சென்னை : சென்னையில் நேற்றிரவு பாஜக பிரமுகர் பாலச்சந்தர் என்பவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கொலையாளிகள் ஒருவாரத்திற்கு முன்னரே அவரை கொலை செய்வதாக சபதம் விட்டதும், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது
சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் , மத்தியசென்னை பாஜக எஸ்சி பிரிவுமாவட்டத் தலைவராக இருந்தார்.
இவர் நேற்று இரவு 7.50 மணிக்கு சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவில் நின்று கொண்டிருந்தார். அவருக்கு பாதுகாப்புக்காக சென்ற துப்பாக்கி ஏந்திய காவலர் பாலகிருஷ்ணன், அருகில் இருந்த டீக்கடைக்கு டீ அருந்தச் சென்றிருந்தார்.

பாஜக நிர்வாகி கொலை
அப்போது, 3 பேர் கொண்ட கும்பல் பாலச்சந்தரை நடுரோட்டில் திடீரென்று சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் பாலச்சந்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் தப்பியோடியது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை பாலசந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெரும் பரபரப்பு
இதனை தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொண்டு கொலை நடந்த இடத்தில் இருந்து கொலையாளிகளின் தடயம் ஏதும் இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் கொலையாளிகளை விரைந்து பிடிக்க 3 உதவி ஆணையர்கள் தலைமையில் 5 தனிப்படை அமைத்து சென்னை பெருநகர ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளர். தனிப்படை காவல் துறையினர் கொலை செய்தவர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தருகின்ற நிலையில்பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் தீவிரம்
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பாலச்சந்தருக்கு ஏற்கெனவே கொலை மிரட்டல் இருந்து வந்துள்ளது. எனவே அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொலை தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், முன் விரோதம் மற்றும் பண விவகாரம் தொடர்பாக இந்த கொலை நடந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மேலும், இறந்துபோன பாலசந்தர் மீது 8 வழக்குகள் உள்ளது எனவும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த கொலை வழக்கில் 3 பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளதாகவும், கொலை தொடர்பாக பிரதீப், அவரது சகோதரர் சஞ்சய், மற்றொரு ரவுடி கலைவாணன் ஆகியோரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கொலைக்கான பின்னணி
தற்போது போலீசார் தேடி வரும், பிரதீப், கலைவாணன், சஞ்சய் ஆகியோர் பாலச்சந்தரின் உறவினர் ஒருவரின் துணிகடைக்கு சென்று மாமுல் கேட்டு தகராறு செய்வது, துணி எடுத்துவிட்டு பணம் கொடுப்பதில்லை என பிரச்சினை செய்துள்ளனர். இது தொடர்பான புகாரில் சிறைக்கு சென்று விட்டு ஒருவாரம் கழித்து சிறையிலிருந்து வெளியே வந்த பிரதீப், பாலச்சந்தர் உறவினர் கடைக்குச் சென்று ஒரு வாரத்தில் பாலச்சந்தரை கொன்று விடுவேன் என்று சபதமிட்டிருக்கிறார்.

தீவிர தேடுதல் வேட்டை
பிரதீப் அவரது தந்தை, பாலசந்தர் ஆகிய மூவரும் குடும்ப நண்பர்களாகவே பழகியுள்ளனர். ஆனால் பாலசந்தர் அரசியலுக்கு வந்தப்பின்னர் உறவு பிரிந்த நிலையில் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளனர். பாலசந்தரின் செல்வாக்கால் அடிக்கடி போலீஸ் புகாருக்கு ஆளான கோபத்தில் பிரதீப் கூட்டாளிகளுடன் சேர்ந்து பாலசந்தரைக் கொன்றிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். இது தொடர்பாக விசாரிக்க துணை ஆணையர் பகலவன் தலைமையில் 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ள நிலையில், மத ரீதியான மோதல் இல்லை என உறுதியாக போலீசார் கூறுகின்றனர்.

பலத்த பாதுகாப்பு
பாலச்சந்தருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டும் அதை தவிர்த்து அவர் தனியே சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த காவலர், பணியில் அசட்டையாக இருந்த காரணத்திற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது சம்பந்தமாக இருதரப்பினரிடையே மேலும் மோதல் ஏற்படாதிருக்க காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications