இந்த மாதிரி விஷயங்கள்' இருக்க கூடாது..விரட்டி விரட்டி பிடிக்கும் சென்னை போலீஸ்! வாகன ஓட்டிகளே உஷார்
சென்னை: வாகன பதிவு எண்களில் தேவையற்ற எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சென்னை காவல்துறை எச்சரிக்கை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே சில வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர் போலீசார்.
இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 பிரிவு 50 மற்றும் 51-ன்படி வாகனங்களின் நம்பர் பிளேட்களில் உள்ள எழுத்துக்கள் மற்றும் எண்களின் பின்னணி நிறம், அளவு மற்றும் குறிப்பிட்ட இடைவெளிகள் இருக்க வேண்டும் எனவும், பிற வாசகங்கள், சின்னங்கள், அல்லது படங்கள் நம்பர் பிளேட்களில் ஒட்டவும்/எழுதவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தவறான அளவுகள்
ஆனால் சமீபகாலமாக, மோட்டார் வாகன சட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகளின் படி நம்பர் பிளேட் பொருத்தாமல், பல்வேறு அளவுகள் மற்றும் வாசகங்களுடன் நம்பர் பிளேட்களை பொருத்தியும், பொதுமக்களில் சிலர் அரசு வாகனம் (G), காவல் (Police) வழக்கறிஞர், (Advocate) மனித உரிமைகள் ஆணையம் Human Right Commission), பத்திரிகை மற்றும் ஊடகம் (Press & Media) இது போன்று பல அரசு துறை சார்ந்த ஸ்டிக்கர்களை ஒட்டி முறைகேடாக பயன்படுத்தியும் வருவதாக தொடர்ந்து காவல் துறைக்கு வந்த புகார்களை அடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், மேற்படி முறைகேட்டில் ஈடுபடும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் பேரில் அந்தந்த காவல் நிலைய சட்டம் மற்றும் ஒழுங்கு ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் தலைமையில் காவல் குழுவினர் வாகன தணிக்கை செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

கம்பி கட்டுற கதையெல்லாம் எழுதுறாங்க
இதன் தொடர்ச்சியாக H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (19.10.2021) மாலை 4.00 மணியளவில் புது வண்ணாரப்பேட்டை கிராஸ் ரோட்டில் வாகனதணிக்கை பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே வந்த AP 03-CL 0365 என்ற பதிவெண் கொண்ட காரை நிறுத்தி விசாரணைசெய்த போது, நம்பர் பிளேட்டின் மேல்புறத்தில் Social Justice for World Human Rights Council, District Chairman, Chittor District என்று எழுதி பெயர் பலகை வைத்திருந்தனர். இது குறித்து வாகனத்தில் வந்த சுரேஷ், (வயது 34, த/பெ.சீனிவாசலு, எண்:18,/36, மதுரா நகர், திருப்பதி, ஆந்திர மாநிலம்) என்பவரிடம் விசாரணை செய்த போது, அவர் எந்தவித அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்பில் இல்லாமல் சட்டவிரோதமாக பெயர் பலகை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அதன் பேரில் சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்து மேற்படி இன்னவோ கார் பறிமுதல் செய்யப்பட்டது.

கார் பறிமுதல்
இதே போன்று )-8 நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கொட்டிவாக்கம், ஈ.சி.ஆர் மீன் மார்கெட் அருகில் நின்று கொண்டிருந்த TN 07 CW 6005 என்ற பதிவெண் கொண்ட இன்னவோ காரை சோதனை செய்த போது அதில் நம்பர் பிளேட்டின் மேல்புறத்தில் Nation Anti Crime & H.R.Council of India, Joint Secretary என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் சின்னம் பொருத்திய கொடியும் இருந்தது. அதன் பேரில் மேற்படி காரையும் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சின்னங்கள் இருக்க கூடாது
மேலும் இதே போன்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் நேற்று (19.10.2021 ) சிறப்பு வாகன தணிக்கை செய்து பிற வாசகங்கள், சின்னங்கள், படங்கள் மற்றும் அரசு நிர்ணயித்த அளவுகளில் இல்லாமல், நம்பர் பிளேட்கள் பொருத்தி வந்த 1892 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சில வாகனங்களில் நம்பர் பிளேட்கள் அப்புறப்படுத்தப்பட்டது.

நடவடிக்கை தொடரும்
இந்த சிறப்பு தணிக்கை தொடர்ந்து நடத்தப்பட்டு மத்திய மோட்டார் வாகன விதிகளின் படி இல்லாமல் குறைபாடுகளுடன் நம்பர் பிளேட்கள் பொருத்தி வரும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் அரசு நிர்ணயித்துள்ள அளவுகளில் நம்பர் பிளேட்களை பொருத்தியும், தேவையற்ற வாசகங்களை நீக்கம் செய்தும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு காவல்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications