"அலறும் கூவம்!" நாட்டிலேயே அதிக மாசடைந்த நதி.. தமிழகத்தில் 10 ஆறுகளின் நிலை மோசம்! பெரிய எச்சரிக்கை
இந்தியாவில் அதிகம் மாசடைந்த நதிகளைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு உள்ளது
சென்னை: தமிழ்நாடு பல துறைகளில் டாப் இடத்தில் இடம் பெற்று சாதனையைப் பிடிக்கும். ஆனால், இப்போது அதிக மாசடைந்த நதிகளைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.
தமிழ்நாடு இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பல்வேறு துறைகளில் முன்னிலையில் இருப்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக மருத்துவர்கள், கல்லூரியில் படிப்போர் எண்ணிக்கை தேசிய சராசரியைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக உள்ளது.
அதேநேரம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இயற்கை வளங்களை நாம் போதியளவில் பாதுகாப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அது குறித்து ஒரு அதிர்ச்சி தகவல்தான் இப்போது வெளியாகியுள்ளது.
அடிதூள்.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட செம அறிவிப்பு.. களமிறங்கிய சர்வதேச "டீம்".. சென்னைக்கு குட்நியூஸ்
நதிகள்
தமிழ்நாட்டில் இருக்கும் பல ஆறுகளை நாம் முறையாகப் பராமரிப்பது இல்லை என்ற புகார் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதன் காரணமாகவே மாநிலத்தில் இருக்கும் பல ஆறுகள் மிக மோசமான ஒரு நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிலும் தலைநகர் சென்னையில் நிலை ரொம்பவே மோசம். கூவம், அடையாறு, கொசஸ்தலை என மூன்று ஆறுகள் ஓடினாலும் கூட மூன்றையும் மோசமான நிலையில் தான் வைத்துள்ளது. சென்னையில் 3 ஆறுகள் ஓடுகிறது என்பதே பலருக்கும் தெரியாது.
மிகவும் மாசடைந்த நதி
நகரில் பார்க்கும் அனைத்தையும் பெரும்பாலானோர் கூவம் நதி என்றே தான் நினைத்துக் கொள்வார்கள். அந்த அளவுக்குத் தான் நாம் நதிகளை பாதுகாக்கிறோம் என்பது துயரம். இதனிடையே மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் மாசடைந்த நதிகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சென்னையில் உள்ள கூவம் நதிதான் இந்தியாவிலேயே மிகவும் மாசடைந்த நதி என்று கூறப்பட்டுள்ளது. நாட்டில் இருக்கும் 603 ஆறுகளை ஆய்வு செய்து இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
ரொம்ப மோசம்
எந்த ஆற்றில் இருந்து எடுக்கப்படும் நீரைச் சுத்தப்படுத்த எந்தளவுக்கு ஆக்சிஜன் தேவை என்பதை வைத்து இந்த பட்டியல் உருவாக்கப்பட உள்ளது. 'Polluted River Stretches for Restoration of Water Quality, 2022' என்ற தலைப்பில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை ஆவடி முதல் சத்யா நகர் வரையிலான கூவம் நிதியில் இந்த பிஓடி லிட்டருக்கு 345 மில்லிகிராம் என்று மிக மோசமான நிலையில் இருந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நதிகளின் நிலைமை ரொம்பவே மோசமாகவே உள்ளது.
மத்திய அரசு ஆய்வு
கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் மாசடைந்த ஆறுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 முதல் 2021 வரை தமிழ்நாட்டில் உள்ள 12 ஆறுகளில் 73 இடங்களில் நீரின் தரத்தைக் கணக்கீடு செய்து இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் 10 ஆறுகளில் 53 இடங்களில் பயோகெமிக்கல் ஆக்சிஜன் டிமான்ட் ஆபத்தான அளவில் உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
எந்த ஆறுகள்
தமிழ்நாட்டில் அடையாறு, அமராவதி, பவானி, காவிரி, கூவம், பாலாறு, சரபங்கா, தாமிரபரணி, வசிஷ்ட நதி, திருமணிமுத்தாறு ஆகிய 10 ஆறுகளில் பயோகெமிக்கல் அதிகம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாகத் தாமிரபரணி மற்றும் கூவம் ஆறுகள் கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் மாசடைந்து வருகிறது. இந்த நதிகளைக் காக்க சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். இருப்பினும் பெரியளவில் இதற்குப் பலன் இல்லை. நதிகளில் அதிகரிக்கும் மாசை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்துள்ளது.
கூவம்
திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து உருவாகும் கூவம், கிழக்கு நோக்கி சுமார் 65 கிலோமீட்டர் ஓடி நேப்பியர் பாலம் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இது சென்னை நகரில் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் ஓடுகிறது. இதில் சென்னை நகரில் இந்த கூவம் ஆறு மிக மோசமாக மாசடைந்த நிலையில் உள்ளது. ஆற்றில் கொட்டப்படும் திடக்கழிவுகள் நீரின் தரம் மற்றும் ஆக்ஸிஜன் அளவை பாதிக்கிறது. கூவம் ஆற்றின் நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மோசமான உடல்நிலை பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் கூவம் ஆற்றில் கலக்கும் மாசை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்த இடங்கள்
அடுத்த மோசமாக மாசடைந்த குஜராத் சமர்மதி ஆற்றில் பிஓடி 292 மில்லி கிராமாக உள்ளது. மூன்றாவது இடத்தில் உத்தரப் பிரதேசத்தின் பஹேலாவில் பிஓடி 287 மி.கி ஆக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆறுகளின் மாசு அதிகரிக்கும் போதிலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, இந்தியாவில் நதி மாசடைவது குறைந்தே உள்ளது. கடந்த 2021இல் மாசடைந்த நாட்டில் 351 ஆறுகள் மாசடைந்து உள்ளதாகக் கூறப்பட்டு இருந்த நிலையில், இந்தாண்டு அது 311ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.