சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி விரைவில் மாற்றம்.. எங்கு செல்ல போகிறார் தெரியுமா?
சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையராக இருக்கும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி விரைவில் மாற்றப்படுவார் என தகவல்கள் கசிகின்றன.
முதல்வர் ஸ்டாலினின் விருப்பத்திற்குரிய அதிகாரிகள் பட்டியலில் இருக்கும் ககன் தீப் சிங், தமிழக அரசின் உள்துறை செயலராக நியமிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
பல்வேறு துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ள ககன்தீப் சிங், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் சென்னை மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வருகிறார்.
ஹெலிகாப்டரை கடலுக்குள் இழுத்த சுறா மீன்.. உண்மை என நினைத்த கிரண் பேடி.. கேலிக்குள்ளான ட்வீட்!
திமுக அரசு
மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் தமிழக முதலமைச்சராக பதவியேற்றபோது அரசின் பல்வேறு துறைகளில் உள்ள அதிகாரிகளை மாற்றினார். முந்தைய ஆட்சிக்காலத்தில் புறக்கணிக்கப்பட்ட முக்கிய அதிகாரிகளுக்கு முக்கியமான பொறுப்புகளை அளித்தார்.
அந்தவகையில், சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷை அப்பதவியிலிருந்து விடுவித்து அந்தப் பணிக்கு ககன் தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டார்.
ககன் தீப் சிங் பேடி
1993ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியைத் தொடங்கிய ககன் தீப் சிங் பேடி, குமரி மாவட்ட ஆட்சியராகவும், மதுரை, கோவையில் ஆணையராகவும் பணியாற்றினார்.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது கடலூர் மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த ககன் தீப் சிங் பேடி சிறப்பான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார்.
சுனாமியால் வீடுகளை இழந்தவர்களை தங்கவைக்க சிறப்பு ஏற்பாடு, அவர்களின் மறுவாழ்விற்காக அறிவிக்கப்பட்ட நிவாரணப் பணிகளை சிறப்பாக அமல்படுத்தியது என்று அனைவரின் மனதையும் கவர்ந்தவர் சிங். கடலூர் மக்களே ஒரு ஆட்சியரை பாராட்டி பேனர் வைத்ததெல்லாம் வரலாறு.
வாழும் பென்னி குயிக்
கடலூர் மாவட்டத்தில் தூர்ந்துபோன வாலாஜா ஏரியை மீட்டு கடலூர் விவசாயிகளுக்கு மறுவாழ்வை ஏற்படுத்திக் கொடுத்தார். நிலக்கரி சுரங்கத்தின் எதிர்ப்பை மீறி மக்களிடம் இந்த ஏரி சீரமைக்கப்படுவதற்கான காரணத்தை விளக்கிக் கூறி 2014ஆம் ஆண்டில் ஏரியை தோண்டும் வேலையைத் தொடங்கினார்.
இப்போது இந்த ஏரியால் 15 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலன் அடைகின்றனர். ககன்தீப் சிங்கின் இத்தகைய செயலால் கடலூர் மாவட்ட மக்கள் அவரை, 'வாழும் பென்னிகுயிக்' என்று பாராட்டுகின்றனர்.
புயல் காலங்களில்
2015ம் ஆண்டு வெள்ளத்தின் போது கடலூர் மாவட்டத்தில் ஒரு மாத காலம் இரவு பகல் பாராமல் பணியாற்றி, விரைவில் நிலைமை சீரடைய உதவினார். இதனைத் தொடர்ந்து வர்தா, ஒக்கி புயல் பாதிப்பின் போதும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இவரே நியமிக்கப்பட்டார். கஜா புயலின் போதும் சிறப்பாகப் பணியாற்றினார். பேரிடர் காலங்களில் சிறப்பாக பணியாற்றுபவர் எனும் பெயர் இவருக்கு எப்போதும் உண்டு.
சென்னை மாநகர ஆணையர்
கொரோனா தொற்று, சென்னை பெருமழை வெள்ளம் என தலைநகரில் துயரங்கள் தொடர்ந்த நேரத்தில், அவற்றிலிருந்து மக்களைக் காப்பதில் ககன் தீப் சிங் மிகச்சிறப்பாகப் பணியாற்றினார். கடந்த மழை வெள்ளத்தின்போது, மழைநீர் விரைவாக வடிய இவர் மேற்கொண்ட துரித முயற்சிகளும் முக்கியமான காரணம். அப்போது நடந்த ஆலோசனைக் கூட்டங்களில் முதல்வர் ஸ்டாலினும் ககன் தீப் சிங் பேடியின் உழைப்பைப் பாராட்டியிருந்தார்.
பிரச்சனை
மாநகராட்சித் தேர்தல் நடைபெற்று புதிய கவுன்சிலர்கள், மேயர் பொறுப்பேற்றதுமே, ககன் தீப் சிங் மாற்றப்படுவார் எனக் கூறப்பட்டது. காரணம், அரசியல் பிரமுகர்களுக்கு எளிதில் வளைந்து கொடுக்காதவர் ககன் தீப் சிங். சென்னை மாநகர கவுன்சிலர்கள் அவருக்கு இடைஞ்சல் தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்ததால் அவரிடம் யாரும் எந்த பிரச்சனையும் வைத்துக்கொள்ளவில்லை. மாநகராட்சி மேயரும் அவருடன் சுமூகமான உறவையே பேணி வந்தார்.
உள்துறை செயலாளராக
இந்நிலையில், தமிழக அரசின் உள்துறை செயலாளர் பதவிக்கு ககன் தீப் சிங் பேடியின் பெயர் அடிபடுவதாக தகவல்கள் கசிகின்றன. முதல்வர் அளித்த பொறுப்புகளை திறம்படச் செய்த ககன் தீப் சிங் பேடியை முதல்வர் உள்துறை செயலராக அமர்த்த திட்டமிட்டு வருகிறாராம். அதிமுக ஆட்சிக்காலத்தில் இருந்து இப்போது வரை ஒரே துறையில் பணியாற்றி வரும் முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒரும் உள்துறை செயலர் பதவிக்கான பட்டியலில் இருக்கிறாராம்.