மீண்டும் "அந்த" ஆயுதங்களை கையில் எடுக்கும் சென்னை மாநகராட்சி.. கொரோனாவை ஒழிக்க முழுவீச்சில் பணிகள்
சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா கட்டுப்பாட்டு மையங்களையும் கான்டாக்ட் டிரேசிங் குழுக்களையும் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் நோய் பரவும் விகிதம் குறையும். மேலும் கொரோனா நோய் உறுதியானவர்களுடன் யார் யார் நெருங்கிய தொடர்பில் இருந்தார்கள் என்பதையும் கண்டறிய முடியும்.
தமிழகத்தில் கொரோனாவின் 2ஆவது அலை மிகவும் வீரியமாக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மாநகராட்சி
இதனை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து ஆலோசனைகளை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் சென்னை மாநகராட்சி அமைந்துள்ள ரிப்பன் கட்டடத்தில் நோய் கட்டுப்பாட்டு மையங்களையும் கான்டாக்ட் டிரேசிங் குழுக்களையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நோய் தொற்று
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில் கட்டுப்பாட்டு அறைகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டோம். கொரோனா உறுதியாகும் நபர்களுக்கு எங்கிருந்து நோய் தொற்று வந்தது என்பதை கண்டறிய முயற்சிப்போம். கான்டாக்ட் டிரேசிங் முறையால் மட்டுமே நோய் தொற்று அதிகரிப்பதை தடுக்க முடியும்.
கான்டாக்ட் டிரேசிங்
அது போல் கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள், கொரோனா பாதிப்பில் உள்ளவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டால் தொற்று பரவும் விகிதம் குறையும். கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்த போது 200-க்கும் மேற்பட்டவர்கள் கான்டாக்ட் டிரேசிங்கில் ஈடுபட்டிருந்தார்கள்.
கான்டாக்ட் டிரேசிங்
இந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியவுடன் கான்டாக்ட் டிரேசிங்கில் வெறும் 10 பேர் மட்டுமே இருந்தனர். தற்போது கான்டாக்ட் டிரேசிங், கட்டுப்பாட்டு அறைகள் ஆகியவற்றை நாங்கள் மீண்டும் கொண்டு வருவோம். பயிற்சி பெற்ற சானிட்டரி இன்ஸ்பெக்டர்களை கொண்டு கான்டாக்ட் டிரேசிங் செய்யப்படும் என்றனர்.