Chennai ECR Car Chase Woman: இரவில் இளம்பெண்களை துரத்திய இளைஞர்கள்.. காரை வழிமறித்து அத்துமீறல்.. வெளியான வீடியோ!
சென்னை: சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு அருகே இரவு நேரத்தில் காரில் சென்ற பெண்களை, 2 கார்களில் வந்த இளைஞர்கள் வழிமறித்து, அவர்களிடம் அத்துமீற முயன்றதாக சில டிவி சேனல்களில் வீடியோ வெளியாகியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரை அடுத்த கானாத்தூர் அருகே முட்டுக்காடு பகுதியில் இரவு நேரத்தில் காரில் சென்ற பெண்களை இளைஞர்கள் சிலர் மற்ற 2 கார்களில் துரத்தி வந்து அச்சமூட்டும் வகையில் நடந்து கொண்டதாக அதிமுக ஆதரவு சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாகப் பரவியது. பிறகு சில டிவி சேனல்களும் அந்த வீடியோவை ஒளிபரப்பின.

அந்த வீடியோவில், காரில் இருக்கும் பெண்கள் பதற்றத்துடன் பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது. காரில் வரும் பெண்களை, மற்றொரு காரில் துரத்திய இளைஞர்கள், சாலையின் குறுக்கே காரை நிறுத்தி அவர்களை செல்ல விடாமல் தடுத்துள்ளனர். அந்த காரில் இருந்து இளைஞர் ஒருவர் வேகமாக ஓடி வந்து காரில் இருந்த பெண்களிடம் கதவை தட்டி, அத்துமீறுவதாக தெரிகிறது.
துரத்திய இளைஞர்களிடம் இருந்து தப்பிக்க காரை ரிவர்ஸ் எடுத்துச் சென்ற நிலையில், அந்தப் பெண்களை காரில் விடாமல் துரத்தி உள்ளனர். பெண்கள் பதற்றத்துடன் பேசும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இளம்பெண்கள் செல்லும் காரை மறிக்கும் மற்றொரு காரில் கட்சிக் கொடி பொருத்தப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை பாலிமர், நியூஸ் 18, புதிய தலைமுறை உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. எனினும், இந்த வீடியோவில் முழு தகவல் இல்லை. எதற்காக சண்டை ஆரம்பித்தது என்பதும் தெளிவாகத் தெரியவரவில்லை.
இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் பரவி வரும் சூழலில், இந்தச் சம்பவம் எப்போது நடந்தது? அந்தப் பெண்களுக்கு என்ன ஆனது? காரில் துரத்தியவர்கள் யார் என்பது குறித்து எல்லாம் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இந்தச் சம்பவம் தொடர்பாக கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்த சம்பவம் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி இரவு நடந்ததாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக திமுக ஆதரவு நெட்டிசன்கள் தெரிவிக்கிறார்கள்.
இதையடுத்து, சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த வீடியோ காட்சி தொடர்பாக பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திமுக கொடி கட்டிய காரில் ஒரு கயவர் கூட்டம் பெண்களை துரத்துகிறது நடு ரோட்டில். இரும்புக்கரத்தை விற்று பேரிச்சம் பழத்துக்கு போட்டு ஆட்சி நடத்தும் முதல்வரே.. இதுதான் உங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு காக்கப்படும் லட்சணமா? தி.மு.க கொடி கட்டினால் எந்த வன்முறையும் செய்யலாமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications