கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை வழக்கில் தண்டனை குறைப்பு.. தமிழகத்தை உலுக்கிய வழக்கின் பின்னணி என்ன?
சென்னை : தமிழகத்தையே உலுக்கிய கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை வழக்கில், குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கண்ணகி - முருகேசன் தம்பதி கடந்த 2003ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி உறவினர்களால் ஆணவக் கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும், ரங்கசாமி, சின்னதுரை ஆகிய இருவரை விடுதலை செய்தும் ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
மூக்கு, காதில் விஷத்தை ஊற்றி.. கண்ணகி - முருகேசன் ஆணவ கொலை.. 13 பேர் குற்றவாளிகள் என அதிரடி தீர்ப்பு
கண்ணகி முருகேசன் வழக்கு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிகண்ணு என்பவரின் மகன் முருகேசன். தலித் சமூகத்தைச் சேர்ந்த முருகேசன், அதே பகுதியில் வசித்த வேறு சமூகத்தைச் சேர்ந்த துரைசாமி மகள் கண்ணகி என்பவரை காதலித்து வந்தார். இதனையடுத்து இருவரும் கடந்த 2003 மே 5ஆம் தேதி கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துகொண்டனர்.
காது, மூக்கில் விஷம்
முருகேசன், கண்ணகியை விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு அவர் வண்ணாங்குடிகாட்டிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். கண்ணகியை காணாமல் தேடிய அவரது உறவினர்களுக்கு காதல் விவகாரம் தெரியவந்தது. இதையடுத்து முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மூலமாக ஜூலை 8-ஆம் தேதி முருகேசனையும், கண்ணகியையும் அழைத்து வந்தனர். இருவரையும் அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் மூக்கு, காது வழியாக விஷத்தை செலுத்தி அவர்களைக் கொலை செய்து, சடலங்களை தனித்தனியாக எரித்தனர்.
கடந்த ஆண்டு தீர்ப்பு
இந்த ஆணவக் கொலை வழக்கு நீதிமன்றத்தில் 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த ஆணவக் கொலை வழக்கை சிபிஐ விசாரித்தால்தான் நீதி கிடைக்கும் என்று வலுத்த கோரிக்கையை தொடர்ந்து, 2004ம் ஆண்டு இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. பின்னர், சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில், 15 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடலூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது.
தூக்கு தண்டனை
கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது. கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனையை உறுதிப்படுத்த, வழக்கை கடலூர் நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பியது. அதேபோல தண்டனையை ரத்து செய்யக் கோரி 13 பேர் தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
விசாரணை
இந்த மேல்முறையீடு மனுக்களை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில், முதலில் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதியப்பட்ட நிலையில், பின் கொலை வழக்காக பதியப்பட்டதாகவும், சம்பவத்தை கண்ணால் கண்ட சாட்சியங்கள் ஏதும் இல்லை எனவும், குற்றம்சாட்டப்பட்டவர்களில் இருவர் பட்டியலினத்தவர்கள் என்பதால் வன்கொடுமை தடுப்பு சட்டம் பொருந்தாது என்றும் வாதிடப்பட்டது.
தண்டனை குறைப்பு
சிபிஐ தரப்பிலும், முருகேசன் குடும்பத்தினர் தரப்பிலும், இந்த கொலை சம்பவத்திற்கு தொடர் சாட்சியங்கள் உள்ளதாகவும், இது ஆணவக்கொலை தான் என்பதால், கடலூர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்யவேண்டும் என்று வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டனர்.
9 பேருக்கு ஆயுள் உறுதி
அதேசமயம், கண்ணகியின் தந்தை துரைசாமி, கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், அப்போதைய காவல் ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய 9 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து, அவர்களின் மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். துரைசாமியின் உறவினர்கள் ரங்கசாமி மற்றும் சின்னதுரை ஆகிய இருவரை விடுதலை செய்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
எஸ்.ஐக்கு ஆயுள் ரத்து
மேலும், அப்போதைய உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் மீதான ஆயுள் தண்டனையை ரத்து செய்த நீதிபதிகள், வேறு ஒரு பிரிவில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையையும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறை தண்டனையையும் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளனர்.