நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை விதிக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்தலின் போது கொரோனா விதிமுறைகள் மீறப்பட்டால் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று இப்போது உச்சத்தில் இருப்பதால் இந்த நிலையில் தேர்தலை நடத்தினால் தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்குமாறு கடந்த 21 ஆம் தேதி ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் நக்கீரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்க ஹைகோர்ட் மறுப்பு.. மாநில தேர்தல் ஆணையம் முடிவெடுக்க பரிந்துரை
அமர்வு
இந்த வழக்கானது உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பிடி ஆதிகேசவலு ஆகியோர் அமர்வு முன் அன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், தேர்தல் அறிவிப்பாணையை ஜனவரி 27-க்குள் வெளியிட உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதை சுட்டிக் காட்டினர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி பலர் வழக்குகளை தொடர்ந்ததால் இந்த வழக்கு 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கு விசாரணை
இதையடுத்து இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு கூறுகையில் கொரோனா கட்டுப்பாடுகளை அனைத்து கட்சிகளும் பின்பற்றும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியும். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. 5 மாநில சட்டமன்ற தேர்தல்களும் நடத்தப்படுகின்றன. எனவே தேர்தலை தள்ளி வைப்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் என கூறிய நீதிபதிகள் இந்த வழக்கை 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்ததனர்.
தாமதம்
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. "தேர்தலை நடத்த தயார்" என மாநில தேர்தல் ஆணையம் சார்பில் சொல்லப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில் தேர்தல் அறிவிப்பை வெளியிட உச்சநீதிமன்றம் வரும் 27ஆம் தேதி வரை கெடு விதித்துள்ளது. எனவே அந்த கெடுவுக்கு முரணாக எந்த உத்தரவையும் போட முடியாது. தேர்தல் நடத்துவதில் உள்ள தாமதத்தை கருத்தில் கொண்டுதான் உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. கொரோனா பேரிடர் என்பது ஒரு காரணமாக உச்சநீதிமன்றத்தில் முன் வைக்கப்படவில்லை. எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை விதிக்க முடியாது.
கொரோனா கட்டுப்பாடுகள்
கொரோனா கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் நீதிமன்றத்திற்கு வரலாம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 10 தினங்கள் கழித்து மீண்டும் வழக்குகள் விசாரிக்கப்படும். வேட்பாளருடன் 3 பேர் மட்டுமே பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டும் என்று நீதிபதிகள் கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதை மாநில அரசும் தேர்தல் ஆணையமும் உறுதி செய்யவும் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனாவை காரணம் காட்டி தேர்தலை ஒத்தி வைக்கக் கூடாது என்ற அரசின் நிலைப்பாட்டுக்கு நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது.