சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முடியும் வரை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கொரோனா பரவலை தடுக்க மார்ச் 25ம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவிக்கப்பட்டது. பின்னர், ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மேலும், சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டதுடன், அதிகளவில் கட்டணம் வசூலிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதனால் விவசாயப் பொருட்களை கொண்டு செல்லும் போது, கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலித்தால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் என்பதால், ஊரடங்கு முடியும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க கோரி திருவண்ணாமலையைச் சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்தது. அப்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல், சுங்க கட்டணம் வசூலிக்க சட்டம் அனுமதிப்பதாகவும், சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டியது நெடுஞ்சாலை துறை ஆணையத்தின் கடமை எனவும் தெரிவித்தார்.
மேலும், இதுசம்பந்தமாக மனுதாரர் கோரிக்கை மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், கோரிக்கை தொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு மனு அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டனர். அந்த மனுவை விரைந்து பரிசீலித்து முடிவெடுக்க நெடுஞ்சாலை துறை ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications