உலக கோப்பை வீரர்களுக்கு மேடையில் இடம் இல்லை! முன்னாள் வீரர் ஆதங்கம்! உறுதி தந்த அமைச்சர் உதயநிதி!
சென்னை : உலக கோப்பை ஹாக்கி காட்சி போட்டி மேடையில் முன்னாள் இந்திய அணி வீரர்களுக்கு இடம் அளிக்காததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் உரையின் போது, முன்னாள் வீரர்களுக்கு மதிப்பளிக்கப்படும் இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாது என தெரிவித்தார்.
2023 ஆண்டு ஹாக்கி உலகக் கோப்பை தொடரை இந்தியா நடத்துகிறது. அடுத்த மாதம் ஜனவரி 13 முதல் 29 ஆம் தேதி வரை ஒடிசா மாநிலத்தில் ஹாக்கி உலக கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி, ஹாக்கி கோப்பையை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மும்பையில் இருந்து விமானம் மூலம் ஹாக்கி கோப்பை இன்று காலை சென்னை கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் ஹாக்கி கோப்பையை தமிழ்நாடு ஹாக்கி சங்கத் தலைவர் ஜான் மனோகரன் பெற்று கொண்டார்.

உலக கோப்பை ஹாக்கி
தொடர்ந்து ஹாக்கி விளையாட்டு வீரர்கள் கோப்பையுடன் வாகனத்தில் தலைமைச் செயலகத்திற்கு சென்றனர். இன்று காலை உலக கோப்பை முதல்வரிடம் வழங்கப்பட்ட நிலையில் ,மாலை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் உலக கோப்பை பொதுமக்கள் பார்க்கும் வகையிலும் முன்னாள் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஏற்பாடு செய்யபட்டு இருந்தது.

முன்னாள் வீரர்கள்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த 1975ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்த தமிழக வீரர்கள் கோவிந்தா, வி.ஜே.பிலிப்ஸ், கிளாடியஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு மேடையில் இடம் ஒதுக்கப்படவில்லை. இதனையடுத்து முன்னாள் வீரர்களுக்கு மேடையில் இடம் இல்லாததை பார்த்த முன்னாள் ஹாக்கி வீரர் பாஸ்கரன் அங்கிருந்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகளிடம் இதுகுறித்து பதில் அளிக்குமாறும் மூத்த வீரர்களுக்கு இடம் வழங்க வேண்டும் என கூறினார்.

அமைச்சர் உதயநிதி
ஆனால் அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இறுதி வரை பதில் கிடைக்காத நேரத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் புகார் அளித்தார் பின்னர் அவர்களுக்கு மேடையில் இடம் வழங்கப்பட்டது. இதனையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உலக கோப்பையை வென்ற முன்னாள் வீரர்களுக்கு உடனடியாக மேடையில் இடம் வழங்க வேண்டுமென அதிகாரிகளிடம் கூறினார். இதனையடுத்து முன்னாள் வீரர்களுக்கு மேடையில் இடம் அளிக்கப்பட்டது.

மேடையில் இடம்
பின்னர் தானாக மேடையில் பேச வேண்டும் என கூறி பேசிய முன்னாள் ஹாக்கி வீரர் வி.ஜே.பிலிப்ஸ்," எங்கள் குடும்பத்தில் 3 நபர்கள் உலக கோப்பை மற்றும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று உள்ளோம் எழும்பூர் மைதானம் மண்ணாக இருந்த காலம் முதல் விளையாடி வருகிறோம் ஆனால் எங்களுக்கான மரியாதை இங்கு வழங்கப்படாமல் இருந்தது மிகவும் கவலை அளிப்பதாகவும் இனி இதுபோன்ற நிகழ்ச்சி நடைபெறாமல் இருக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் உரையின் இறுதியாக இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாது என தெரிவித்தார். முன்னாள் வீரர்கள் அதிருப்தியால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications