சென்னை அருகே வில்லங்க சான்றால் வெளிவந்த வில்லங்கம்.. போலி ஆவணத்தால் பறிபோன 3 கோடி நிலம்
சென்னை: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த முதியவருக்கு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே 36 சென்ட் நிலம் இருக்கிறது. இவரது நிலத்திற்கு வில்லங்க சான்று போட்டு பார்த்த போது, அது வேறு ஒரு நபரின் பெயரில் பதிவாகி இருந்தது. இதை கண்டு ஆடிப்போன அவர் போலீசார் உடனடியாக ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நிலத்தின் மதிப்பு மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இந்த பகுதிகளில் நிலத்தின் மதிப்பு எவ்வளவுவேகமாக உயர்ந்துள்ளதோ, அதேபோல் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்வதும் அதிகரித்து வருகிறது. நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்வது அதிகமாக நடக்கிறது. நிலத்தை வாங்கிப்போட்டு வெளியூரில் வசிப்பவர்களை குறிவைத்து மோசடி நடக்கிறது. போலி ஆதார், போலி வாரிசு சான்றிதழ், போலி உயில் சாசனங்கள் எழுதி மோசடி செய்து பத்திரப்பதிவு செய்கிறார்கள்.

இப்படி நடந்த மோசடியை நிலம் வாங்கியவரே வில்லங்கம் உள்ளதா என்று போட்டு பார்த்தால் மட்டுமே வெளிச்சத்திற்கு வரும். அவர் கவனிக்காமல் விட்டுவிட்டால், அல்லது 10 வருடம் அல்லது 15 வருடம் கழித்து பார்த்தால் அங்கு வேறு யாராவது குடியிருப்பார்கள். அவர்களை வெளியேற்ற முடியாத அளவிற்கு பத்திரம் பல கைகளுக்கு மாறி இருக்கும். இது போன்ற வில்லங்கங்களை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் நூதன முறையில் மோசடிகளை செய்கிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குனம் கிராமம், மாதா கோவில் தெருவை சேர்ந்த 50 வயதாகும் ஆரோக்கியதாஸ் என்பவருக்கு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே 36 சென்ட் நிலம் இருக்கிறது. ஆரோக்கியதாஸ் அவரது இடத்தின் பேரில் வில்லங்க சான்று போட்டு பார்த்தபோது வேறு ஒரு நபர் பெயரில் சொத்து பதிவாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஆரோக்கியதாஸ் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.
ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். விசாரணையில் ஆரோக்கியதாஸ் இடத்தை விஸ்வநாதன் என்பவர் போலி ஆவணம் மூலம் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சரவணன் என்பவருக்கு பொது அதிகார பத்திரம் பதிவு செய்து கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் வள்ளி இந்த வழக்கில் தொடர்புடைய அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகரை சேர்ந்த 50 வயதாகும் சரவணன் , சென்னை கொளத்தூர் பொன்னியம்மன்மேடு, தணிகாசலம் நகரை சேர்ந்த விஸ்வநாதன் (47), செங்குன்றம் அடுத்த விளாங்காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த செங்குட்டுவன் (41), சென்னை குரோம்பேட்டை துர்கா நகரை சேர்ந்த சசிகுமார் (33) ஆகிய 4 பேரை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.3 கோடி என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications