சைக்கிள் எடுத்துட்டுவாங்க ! இந்தியாவிலேயே முதல்முறை.. சென்னை மெட்ரோ ரயிலில் சூப்பர் வசதி!
சென்னை: சென்னை மெட்ரோ ரெயில் இப்போது சைக்கிளை எடுத்துக்கொண்டு வருபவர்களை, சைக்கிளோடு பயணிக்க அனுமதி அளித்துள்ளது, இந்த புதிய திட்டப்படி சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்தீர்கள் என்றால், மெட்ரோ ரயிலில் நீங்கள் விரும்பிய இடத்தில் இறங்கி அங்கிருந்து நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சைக்கிளிலேயே சென்றுவிடலாம்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனமும் பயணிகளை கவர பல விஷயங்களை செய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களில் 50 சதவீதம் தான் கட்டணம், சிறப்பு பாஸ் வசதி, பார்க்கிங் வசதி, ஏடிஎம் வசதி உள்ளிட்ட பல விஷயங்களை செய்துள்ளது.
இப்படிப்பட்ட சலுகைகள் காரணமாகவும், விரைவாக செல்ல முடியும் என்ற காரணத்தாலும் பலரும் சென்னை மெட்ரோ ரயிலில்இப்போது விரும்பி பயணிக்கிறார்கள்.

நல்ல வரவேற்பு
ஆரம்பத்தில் காற்றாடி கிடந்த மெட்ரோ ரயில், முழுமையாக செயல்பாட்டு வந்த பிறகு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கட்டணம் தான் கொஞ்சம் அதிகமாக உள்ளது. எனினும் பேருந்தில் செல்லும் நேரத்தை ஒப்பிடும் போது பயணிகளுக்கு கட்டணம் பெரியதாக தெரியவில்லை. செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாக செல்ல மெட்ரோ ரயில் சேவை சென்னை மக்களுக்கு உதவுகிறது.

வீடு முதல் ரயில்
எனினும் சென்னை மெட்ரோ ரயில் நகரின் சில முக்கிய இடங்களை இன்னும் கவர் செய்யவில்லை. வீடுகளில் இருந்து சில கிலோமீட்டர் பயணித்து தான் மெட்ரோ ரயிலை அடைய வேண்டிய நிலையில் மக்கள் உள்ளார்கள். அதேபோல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சில கிலோமீட்டர் ஆட்டோ உள்ளிட்ட வாகனத்தில் பயணித்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இனி காத்திருக்கதேவையில்லை
இதனால் மெட்ரோ ரயில் பயணம் என்பது காஸ்ட்லியான பயணம் இருக்கிறது. இதன் காரணமாக சென்னை மெட்ரோ ரெயில் இப்போது சைக்கிளை எடுத்துக்கொண்டு வருபவர்களை, சைக்கிளோடு ரயிலில் பயணிக்க அனுமதி அளித்துள்ளது, , இதனால் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வீடு அல்லது அலுவலகம் அல்லது செல்ல வேண்டிய இடத்திற்கு எளிதாக சென்றுவர முடியும். கார்கள் மற்றும் ஆட்டோரிக்ஷாக்களுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.

வெள்ளிக்கிழமை முதல்
வெள்ளிக்கிழமை முதல், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தங்கள் சைக்கிள் உடன் மெட்ரோ ரயில்களில் பயணிக்க பயணிகளை அனுமதிக்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், "பயணிகள் தங்கள் சைக்கிளுடன் பயணிக்க அனுமதிக்கும் இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் வசதி நாங்கள் தான். இது நாங்கள் மேற்கொண்டுள்ள சுற்றுச்சூழல் நட்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

சிறிய சைக்கிள் தான்
ஆனாலும் இதில் ஒரு கண்டிசன் உள்ளது. பயணிகள் சிறிய மற்றும் மடிக்கக்கூடிய சைக்கிள்களை மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் . எங்கள் மெட்ரோ நிலையங்களில் உள்ள லிஃப்டில் பொருத்தக்கூடிய சைக்கிள் மட்டுமே அனுமதிக்கப்படும். சைக்கிள்களை ஏற்றிச் செல்லும் பயணிகள் சிறப்பு வகுப்பில் மட்டுமே பயணிக்க முடியும், ஏனெனில் சைக்கிள்களுடன் சாதாரண பெட்டியில் பயணித்தால் அது மற்ற பயணிகளுக்கு அசவுகரியத்தை ஏற்படத்தும் எனவே சிறப்பு பெட்டியில் பயணிக்க அனுமதிக்கிறோம் என மெட்ரோ ரயில் அதிகாரி கூறினார்..












Click it and Unblock the Notifications