இப்படி மெசேஜ் வந்தா நம்பாதீங்க..! ‘பணம் அபேஸ்’ சைபர் கொள்ளையர்களின் புது டெக்னிக்.. போலீஸ் வார்னிங்!
சென்னை : ஈபி பில் உடனே கட்டவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மெசேஜ் அனுப்பி, அதன் மூலம் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடும் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறை அலெர்ட் செய்துள்ளது.
ஆன்லைன் வாயிலாக நடக்கும் மோசடிகள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. நூதனமான வழிகளில் செயல்படும் மோசடி கும்பல்களின் திட்டங்களுக்கு படித்தவர்களும் கூட இலக்காகின்றனர்.
அந்தவகையில், சமீப நாட்களாக ஒரு புதுவகையான மோசடி தொடர்பாக காவல்துறைக்கு அதிக புகார்கள் வந்துள்ளன. அதுகுறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சைபர் குற்றங்கள்
இணையத்தின் அபரிமிதமான வளர்ச்சி, பொதுமக்களுக்கு அதிக நன்மைகள் அளித்தாலும், இணையம் மூலமாக நடைபெறும் நுட்பமான குற்றங்களும் உலகில் பெருகிவிட்டது. இன்று பெரும்பாலானோர் ஆன்லைன் சேவைகளை பயன்படுத்தி வரும் நிலையில், மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆன்லைன் மூலம் பணம் திருடும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆன்லைன் மோசடிகளுக்கு இலக்காகி வருகின்றனர். சில லிங்க்குகளை அனுப்பி அதை க்ளிக் செய்தாலே தகவல்களையும், பணத்தையும் திருடும் அளவுக்கு மோசடி கும்பல்கள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஈபி பில் கட்டுங்க
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சமீப காலமாக சைபர் கிரைம் குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அதன்படி பொதுமக்களின் மொபைல் எண்ணுக்கு தங்கள் வீட்டு மின் இணைப்பு (Electricity) இன்று இரவோடு துண்டிக்கப்படும் என்றும், சென்ற மாத பில் கட்டணம் அப்டேட் செய்யப்படவில்லை எனவும் உடனே மின்வாரிய அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு மொபைல் எண்ணையும் சேர்த்து எஸ்.எம்.எஸ் அனுப்புவார்கள்.

ஆரம்பிக்கும்போது 10 ரூபாய்
இதனை உண்மை என்று எண்ணி தொடர்பு கொள்ளும் பொதுமக்களிடம் அவர்கள் போனில் ரிமோட் அக்சஸ் அப்ளிகேஷன்களான Quick Support அல்லது Any Desk போன்றவற்றை டவுன்லோட் செய்ய சொல்லுவார்கள். அதன் மூலம் எதிர்முனையில் இருக்கும் பொதுமக்களின் செல்போனில் உள்ள விவரங்களை சைபர் குற்றவாளிகள் எளிதாகப் பார்க்க முடியும். பின்னர் 10 ரூபாய் போன்ற குறைந்த அளவில் ரீசார்ஜ் செய்ய சொல்லுவார்கள்.

ஓடிபி சொல்லுங்க சார்
அப்போது பொதுமக்கள் உள்ளிடும் வங்கி தொடர்பான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி குற்றவாளிகள் தங்களுக்கு தேவையான அக்கவுண்டுகளுக்கு பணம் அனுப்பிக் கொள்வார்கள். Quick Support, Any Desk போன்ற செயலிகளை டவுன்லோட் செய்ததால் பரிவர்த்தனை தொடர்பாக பொதுமக்களின் மொபைல் எண்ணிற்கு வரும் One Time Password (OTP) களையும் குற்றவாளிகளால் எளிதில் கண்டறிய முடியும்.
இதன் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணத்தை கொள்ளையடிக்க முடியும்.

மின்வாரியம் இப்படி செய்யாது
எனவே பொதுமக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், அந்த மொபைல் எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும், மின்வாரியத்திலிருந்து இது போன்ற குறுந்தகவல்களோ, போன் அழைப்புகளோ வராது என்பதால், பொதுமக்கள் இது போன்ற சம்பவங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்" என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications