"இளைஞர்கள் கவனத்திற்கு" இருசக்கர வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு.. சென்னை போலீஸ் எச்சரிக்கை!
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி இருசக்கர வாகனங்களுக்கு சென்னை காவல்துறை தரப்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை மாலை 6 மணிக்கு மேல் இரண்டுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் ஒன்றாக பயணித்தால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக் ரேஸ் மற்றும் சாகசத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், 2023ம் ஆண்டு புத்தாண்டை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட இளைஞர்கள் தயாராகி வருகின்றனர்.
டிசம்பர் 31 மாலை தொடங்கி ஜனவரி 1 அதிகாலை வரை நடைபெறும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் இருக்க காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சென்னை காவல்துறை
தமிழ்நாட்டில் உயிரிழப்புகள் இல்லாத புத்தாண்டு கொண்டாட்டத்தை உறுதி செய்ய காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதில் குறிப்பாக நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட அனுமதியில்லை என்றும், இரவு பொதுமக்கள் யாரும் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பைக் ரேஸ் கூடாது
அதேபோல் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் சென்னையில் பைக் ரேசை தடுக்க சோதனைச் சாவடிக்ள அமைக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கடற்கரைகளில் அனுமதி
அதேபோல், மொபைல் கண்காணிப்பு வாகனங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், இரவில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை சாலையில் இரவு 7 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. எலியடஸ் கடற்கரையிலும் இரவு 7 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் பறிமுதல்
அதேபோல் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதை தடுக்க சென்னை காவல்துறை தரப்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மாலை 6 மணிக்கு மேல் இரண்டு இருசக்கர வாகனங்களுக்கு ஒன்றாக பயணித்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. இதனால் இளைஞர்கள் விதிமீறல்களில் ஈடுபடாமல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications