சென்னை திருவல்லிக்கேணியில் கொடூரம்.. ஊசி போட்ட பின்னரும் ரேபிஸ் பாதிப்பு! தந்தையை இழந்த மகன் வேதனை
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் வெறிநாய் கடிக்கு ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வெறிநாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசி போட்ட பின்னரும், நோய் பாதித்து மரணம் ஏற்பட்டிருக்கிறது.
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் முகமது நஸ்ருதீன் (50). இவர் திருவல்லிக்கேணி பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி திருவல்லிக்கேணியில் வெறிநாய் ஒன்று இவரை கடித்திருக்கிறது. நாய் கடித்தவுடன் இவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரேபிஸ் தடுப்பூசியை போட்டிருக்கிறார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

இது குறித்து இவரது மகன் முகமது சமீருதீன் கூறியதாவது, "என்னுடைய தந்தை ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி திருவல்லிக்கேணி பகுதியில் அப்பாவை தெரு நாய் ஒன்று கடித்து விட்டது. நாய் கடித்த உடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று நாங்கள் தடுப்பூசிய செலுத்திக்கொண்டோம். மொத்தம் ஐந்து ஊசிகள் தேதி வாரியாக போடப்பட்டது. தடுப்பூசி போடப்பட்ட பின்னரும் கடந்த பத்தாம் தேதி அப்பாவுக்கு திடீரென லேசான காய்ச்சலும் கை, கால் எரிச்சலும் ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து தனியார் கிளினிக் அழைத்துச் சென்று அப்பாவுக்கு ஊசி போட்டு அழைத்து வந்திருந்தோம். ஆனாலும் உடல் வலி, கால் வலி சரியாகவில்லை என்று கூறிக் கொண்டே இருந்தார். மீண்டும் தனியார் கிளினிக் சென்று டிரிப்ஸ் ஏற்றுக்கொண்டு வீட்டுக்கு அவரை அழைத்து வந்தோம். அடுத்த நாள் காலை அவர் பல் துலக்கும் போது தண்ணீரை பார்த்து பயந்தார். இதனை அடுத்து அதே தனியார் கிளினிக் அழைத்துச் சென்று காட்டிய போது, அங்குள்ள மருத்துவர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூறியிருந்தார்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அப்பாவை அனுமதிக்கப்பட்ட பின்னர் மருத்துவர்கள் அப்பாவுக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்தனர். இந்த தொற்று பாதிப்பை ரத்த பரிசோதனை மூலமோ, வேறு எந்த பரிசோதனைகள் மூலமோ தெரிய வராது என்றும், அறிகுறிகள் தெரிந்தால் மட்டுமே இதை கண்டறிய முடியும் என்றும் மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
இந்த தொற்று ஏற்பட்டால் மரணம் உறுதி என்பதை மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். மருத்துவர்கள் சொன்னதைப் போல அடுத்தடுத்த நாட்களில் அப்பாவின் உடல்நிலையில் மாற்றங்கள் தீவிரமாக இருந்தது. தண்ணீர் குடிக்க முடியாமல் அவர் மிகவும் வேதனை அடைந்தார். வாயில் நுரை தள்ளியவாறு இருந்தது. தண்ணீரை கண்டு அவர் மிகவும் பயந்திருந்தார். இறுதியில் அவர் உயிரிழந்துவிட்டார். கடைசி நேரத்தில் ஏறத்தாழ நாய் போலவே அவர் மாறியிருந்தார்.
இத்தனைக்கும் எனது தந்தைக்கு குடிப்பழக்கம், போதை பழக்கமோ எந்த பழக்கமும் இல்லை. சர்க்கரை, ரத்த கொதிப்பு என எந்த நோய்களும் கிடையாது. இனியும் இப்படி எந்த உயிரும் பலியாக கூடாது என நான் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்" என வேதனையுடன் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications