ஆண்டவன்தான் சென்னையை காப்பாற்றனும்.. ஆவேசமாக வந்த ஜெயக்குமார்
சென்னை: ஒருநாள் மழைக்கே இப்படி சென்னை மிதக்கிறது. இன்னும் ஆறு நாட்கள் மழையிருக்கிறது அந்த ஆண்டவன்தான் சென்னை மக்களை காப்பாற்ற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். எவ்வளவு பெரிய மழை பெய்யதாலும் வெள்ளம் வடிந்து விடுகிறது என்பது போல பிரம்மாண்ட விளம்பரம் செய்யப்படுவதாகவும் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் வட மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த இடங்களில் வெள்ளநீர் வடிந்தாலும் தாழ்வான பகுதிகள் தத்தளிக்கின்றன. வட சென்னையில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பெரம்பூர், கொரட்டூர் மழைநீரில் தத்தளிக்கிறது. பல வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தென் சென்னையிலும் பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மந்தைவெளி, மயிலாப்பூர் பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. வெள்ளம் வழிந்தோடு விடுவதாக சமூக வலைத்தளங்களில் மாநகராட்சி சார்பில் புகைப்படங்கள் பதிவிடப்படுவதற்கு பலரும் வெள்ளம் சூழ்ந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

ஜெயக்குமார்
இதனிடையே சென்னையில் மழையால் ஸ்லாப் இடிந்து விழுந்து உயிரிழந்த பெண்ணிற்கு அஞ்சலி செலுத்த வந்த ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், சென்னையில் குற்று உயிரும் குலை உயிருமாக இருந்த பெண்ணை காப்பாற்றியிருக்கலாம். 2 மணி நேரம் கழித்து தனியார் ஆம்புலன்ஸ்தான் வந்துள்ளது. அவசர காலத்திற்குக் கூட 108 ஆம்புலன்ஸ் வரவில்லை. விபத்து ஏற்படும் போது காப்பாற்றக்கூடிய நிலையில் கூட மருத்துவத்துறை செயல்படவில்லை. உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆண்டவன் காப்பாற்ற வேண்டும்
சென்னையில் ஆபத்தை விளைவிக்க நிலையில் பாதாள சாக்கடைகள் உள்ளன. மூடப்படாமல் உள்ளதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எத்தனையோ இடங்களில் தண்ணீர் எது பள்ளம் எது என்று தெரியாமலேயே உள்ளனர். ஒருநாள் மழைக்கே இப்படி வெள்ளம் சூழ்ந்துள்ளது இன்னும் 6 நாள் மழையிருக்கிறது சென்னைவாசிகளை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்.

மேயர் ஆய்வு
பல பகுதிகளை ஆய்வு செய்த மேயர், எம்எல்ஏ இங்கு வரவில்லை. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை. மழையால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு அரசு எந்த நிதி உதவியும் அறிவிக்கவில்லை. மக்களைப் படாதபாடு படுத்தும் அரசாக உள்ளதாக குற்றம் சாட்டினார். பல சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. முதல்வர் தொகுதியான கொளத்தூரிலேயே வெள்ளநீர் தேங்கியுள்ளதாக ஜெயக்குமார் கூறினார்.

ஊடகங்களை மிரட்டுவதா?
மழை பெய்து வெள்ளம் தேங்காமல் தண்ணீர் வடிந்து விடுவதாக புகைப்படங்களை பதிவிடுகின்றனர். பிரம்மாண்டாக விளம்பரம் மட்டுமே செய்கின்றனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை வீடியோ எடுத்து செய்தி வெளியிடும் ஊடகத்தினரை மிரட்டுகின்றனர். அதிகாரம் படைத்த ஊடகத்தினருக்கே இந்த நிலை என்றால் சாதாரண பாமர மக்களின் நிலை என்னவாகும் என்று நினைத்து பாருங்கள். இதுபோல அரசை எந்த காலத்திலும் பார்க்கமுடியாது என்றும் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications