சூப்பர்.. சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் பொது மக்கள் பயணிக்கலாம்.. ஆண்களுக்கு மட்டும் நிபந்தனை
சென்னை: சென்னை புறநகர் ரயில் சேவையை நாளை முதல் பொது மக்கள் பயன்படுத்தலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
புறநகர் ரயில் சேவையில் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில் இனி, அனைவரும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் புறநகர் ரயில் என்பது பொது மக்கள் அனைவருமே பயன்படுத்தி வந்த ஒரு முக்கியமான ரயில் சேவை. லட்சக்கணக்கானவர்கள் தங்களுடைய பணிகளுக்காக இந்த சேவையைத்தான் பயன்படுத்தி வந்தார்கள்.

அத்தியாவசிய பணியாளர்கள்
கொரோனா காரணமாக கடந்த பல வாரங்களாக புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக பணியாளர்கள் மட்டுமே இந்த புறநகர் ரயில் சேவையை பயன்படுத்தலாம் என்ற நிலை இருந்தது.

நாளை முதல் இயங்கும்
தற்போது கொரோனா பரவல் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் சென்னை புறநகர் ரயில் சேவையானது, நாளை முதல் மீண்டும் தன்னுடைய முழு இயக்கத்தை தொடங்குகிறது. ஆனால், அதிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன.

ஆண்களுக்கு நிபந்தனை
ஆண்கள், பீக் ஹவர் நேரத்தில் இந்த ரயில்களில் பயணிக்க அனுமதியில்லை. அதாவது, காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணிக்குள் அவர்கள் பயணிக்கலாமே தவிர பிற நேரங்களில் பயணிக்க கூடாது.

பெண்களுக்கு சலுகை
பெண்களைப் பொறுத்தளவில் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அவர்கள் அழைத்துச் செல்ல அனுமதி உண்டு. காலை முதல் இரவு வரை எத்தனை முறை வேண்டுமானாலும் பெண்கள் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்தலாம்.

அரசு ஊழியர்களுக்கு கட்டுப்பாடு இல்லை
அதேநேரம், அரசு ஊழியர்கள் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்த காலக்கெடு எதுவும் கிடையாது. எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். மத்திய அரசு பணியாளர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் ஆகியோருக்கும் இந்த சலுகை உண்டு. அவர்களும், எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம்.

பிற ஊர்களுக்கு செல்வோர் கவனிக்க
தொலைதூர ரயில்களில் பயணித்து சென்னை வருவோர், அல்லது சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு தொலைதூர ரயில்களில் செல்வோர் அந்த ரயில் டிக்கெட்டை காண்பித்து பயணம் செய்யலாம் ஆனால் ஒருமுறை மட்டும் தான் இந்த ரயில் டிக்கெட்டை காட்டி குறிப்பிட்ட நாளில் பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications