சென்னை புறநகரில் தொடர் கனமழை.. பொதுமக்கள் பாதிப்பு.. அடுத்த 3 மணிநேரம் முக்கியம்.. புது அப்டேட்
சென்னை: சென்னை புறநகர் பகுதிகளான வளசரவாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், வானகரம், அய்யப்பன் தாங்கல், நெற்குன்றம் உள்ளிட்ட பல பகுதிகளில் நள்ளிரவு முதல் தற்போது வரை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில்மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் இருள் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருமழை வெளுத்து வாங்கி வருகிறது. தற்போதும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் மழை தொடர்பான அறிவிப்புகளை வானிலை ஆய்வு மையம் உன்னிப்பாக கவனித்து அடிக்கடி அப்டேட் செய்து வருகிறது.

சென்னை புறநகரில் கனமழை
வடகிழக்கு பருவமழை துவக்கம் முதலே சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிகமாக பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று நள்ளிரவும் சென்னை எழும்பூர், மெரினா, திருவல்லிக்கேனி, அண்ணாசாலை, மயிலாப்பூர், எழும்பூர் உள்பட சில இடங்களில் கனமழை பெய்தது.
சென்னையை போல் சென்னை புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

எந்தெந்த பகுதிகளில் மழை
சென்னை புறநகர் பகுதிகளில் வளசரவாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், வானகரம், நெற்குன்றம், அய்யப்ன்தாங்கல் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த கனமழை இன்று காலையிலும் விடவில்லை. காலையிலும் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

வாகன ஓட்டிகள் சிரமம்
இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் தண்ணீர் வெளியேற முடியாத பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக போரூர், வளசரவாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செல்லக்கூடிய பகுதிகளில் மழைநீர் என்பது அதிகளவில் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். பல இடங்கள் இருள் சூழ்ந்த நிலையில் இருந்தன. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.

மக்கள் பாதிப்பு
இந்த மழையின் காரணமாக வீட்டில் இருந்து வெளியேறிய மக்கள் கைகளில் குடைகளுடன் சென்றனர். அதோடு தொடர்ந்து மழை பெய்து வருவதால் புறநகர் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் என்பது குறைந்து இருந்தது. டூவீலர்களிலும் முக்கிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் சென்றனர். கார், உள்ளிட்ட வாகனங்களும் வழக்கத்தை விட குறைந்த எண்ணிக்கையிலேயே சாலைகளில் சென்றன.

அடுத்த 3 மணிநேரம் முக்கியம்
இதற்கிடையே தான் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணிநேரம் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் சென்னையையொட்டி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications