முகநூல் காதல்.. மகேஷ் என்னை ஏமாற்றிவிட்டார்.. சென்னையில் தீக்குளித்த இளம் பெண்.. பரபர வாக்குமூலம்
சென்னை: புழல் சிறை காவலரை முகநூலில் காதலித்து 17 வயது சிறுமி, தன்னை அவர் ஏமாற்றிவிட்டதாக கூறி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தான் தீக்குளிக்க சிறை காவலரே காரணம் என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
நேரில் பார்த்து பழகி உருவாகும் காதல்களில் பல இங்கு உண்மையாக இருப்பதில்லை. வெறும் இனக்கவர்ச்சியாக பதின்ம வயது சிறுமிகள், பார்த்த உடன் சினிமா பாணியில் காதல் வலையில் வீழ்ந்து பின்னாளில் ஒடிப்போய் திருமணம் செய்து வாழ்க்கையை சீரழித்துக்கொள்கிறார்கள். பெற்றவர்களின் பேச்சை கேட்காமல் சீரழிந்த பின்னர் எதுவும் செய்ய முடியாத நிலை அதிகமாக உள்ளது.
இது ஒருபுறம் எனில் சமூக வலைதளங்களில் காதல் வலையில் வீழ்ந்து வாழ்வை நரகமாக்கி கொள்ளும் பெண்களும் அதிகமாகி வருகிறது. முகநூலில் சாட்டிங் செய்பவரை காதலித்து பின்னாளில் பெரும் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் வாழ்வில் தவறான முடிவை நாடுபவர்களும் இருக்கிறார்கள்.
மகேஷ் காரணம்
அப்படித்தான் சென்னைபுழல் சிறை காவலரை முகநூலில் காதலித்து 17 வயது சிறுமி, தன்னை அவர் ஏமாற்றிவிட்டதாக கூறி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தான் தீக்குளிக்க சிறை காவலரே காரணம் என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
முகநூல் பழக்கம்
சென்னை வியாசர்பாடி ராஜீவ் காந்தி நகர் 19-வது தெருவை சேர்ந்தவர்கள் ஜான் கென்னடி மற்றும் எலிசபெத் தம்பதியினர். இவர்களுக்கு கிளின்டன் என்ற மகனும், ரோஸி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 17 வயது மகளும் உள்ளனர். மின்ட் பகுதியில் உள்ள கேட்டரிங் இன்ஸ்டிடியூட்டில் ரோஸி படித்து வருகிறார். இவர் கடந்த 6 மாதங்களாக அரக்கோணத்தை சேர்ந்த மகேஷ் என்ற நபரோடு பழகி வந்துள்ளார்.
பெற்றோர் எதிர்ப்பு
இந்த பழக்கம் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. மகேஷ் புழல் சிறையில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த காதல் விவகாரம் ரோஸியின் பெற்றோர்களுக்கு தெரிந்து தட்டிக் கேட்டிருக்கிறார்கள். அத்துடன் ரோஸியின் செல்போனை வாங்கி வைத்துக் கொண்டார்களாம். இது ஒருபுறம் எனில் 6 மாதமாக காதலித்துவிட்டு ரோஸியை திருமணம் செய்ய மகேஷ் மறுத்துவிட்டாராம். இதனால் மன உளைச்சலில் இருந்த ரோஸி, நேற்று முன்தினம் மாலை அவரது அம்மாவுடன் இதுகுறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
80 சதவீத காயம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் ரோஸி தனது அறையில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். 80 சதவீத காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார். அவருக்கு தீவிரசிகிசை அளிக்கப்பட்டு வருகிறது.
முகநூல் காதல் விபரீதம்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் ரோஸி வீடியோ வாக்குமூலம் கொடுத்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் தமது இந்த நிலைக்கு காவலர் மகேஷ்தான் காரணம் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து எம்.கே.பி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முகநூல் காதல் விபரீத்ததில் முடிந்துள்ளது. இதை பார்த்த உடன் காதல் என நினைக்கும் இளம் வயதினர் உணர்ந்து செயல்படுவது நல்லது.