'விக்ரம்' பட பாணியில்.. சென்னையில் புழங்கும் போதை மாத்திரைகள்.. ஷாக் ரிப்போர்ட்.. ரோலக்ஸ் யாரு?
சென்னை: சமீப நாட்களாக கஞ்சாவுக்கு எதிரான நடவடிக்கையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், சென்னையில், போதை மாத்திரைகளின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருவதாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிய வருகின்றது.
தமிழ்நாட்டை பொறுத்த அளவில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் தடை செய்யப்பட்டவையாகும். ஆனாலும் கடந்த சில நாட்களாக இதன் பயன்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வந்தன. இதனால் இளைஞர்கள் மட்டுமல்லாது சிறார்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே இதனை முற்றிலுமாக ஒழிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவையடுத்து ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை தொடங்கியது. முதல் ஆப்ரேஷனில் பெரிய அளவிலான கஞ்சா சப்ளையர்களுக்கு ஸ்கெட்ச் போடப்பட்டது.
கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய முதல் ஆப்ரேஷனில் சுமார் 1,200க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். அதேபோல ரூ.2.35 கோடி மதிப்பிலான 2,300 கி.கி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து கஞ்சா கடத்தல்காரர்கள் சற்று பயப்பட தொடங்கினர். வெளிப்படையாக கடத்திக்கொண்டிருந்த கஞ்சா மறைமுகமாக கடத்தப்பட்டது. வெளி மாநிலங்களிலிருந்து வந்து சேர வேண்டிய கஞ்சா தாமதமாக ஒரு ஒழுங்கு முறையின்றி வந்து சேர்ந்தது.
ராமர்தான் நம் கொள்கை.. சனாதன தர்மம் தமிழ்நாட்டில்தான் தொடங்கியது.. ஆளுநர் ரவி மீண்டும் பரபர பேச்சு!
கஞ்சா ஆப்ரேஷன்
பின்னர் சிறிது நாட்கள் கழித்து கடந்த மார்ச் மாதம் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 தொடங்கியது. இந்த முறை காவல்துறையினரின் கெடுபிடி தீவிரமடைய தொடங்கியது. கஞ்சா கடத்தி கைது செய்யப்பட்டவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரும் கஞ்சா பெரிய அளவுக்கு தடை செய்யப்பட்டது. இதற்காக வெளி மாநிலத்திற்கே சென்று தமிழ்நாடு காவல்துறையினர் அதிரடி ஆக்ஷனில் இறங்கினர். இத்துடன் நின்றுவிடாமல் இந்த கஞ்சாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு அழைத்து வர மனநல ஆலோசனையும் கொடுக்கப்பட்டது.
மூன்றாவது ஆப்ரேஷன்
இந்த ஆப்ரேஷனில் சுமார் 3,500 கி.கி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 2,400க்கு அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து மூன்றாவது கஞ்சா வேட்டையை காவல்துறையினர் தொடங்கினர். இதில் சில்லறை வியாபாரிகள் பலர் சிக்கினார்கள். இந்த மூன்று ஆப்ரேஷன்களிலும் ஒரளவு கஞ்சா புழக்கம் சென்னையில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் போதைப்பொருட்கள் மூலம் நடைபெறும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இது காவல்துறையினருக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் விசாரணையில், கஞ்சாவுக்கு பதில் இளைஞர்கள் போதை மாத்திரைகள் பக்கம் திரும்பி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
போதை மாத்திரை
அதாவது, கடந்த ஆண்டில் மட்டும் 52,612 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது 2021ம் ஆண்டில் 5,949 ஆக இருந்தது. போதை மாத்திரைகள் என தனியாக எதுவும் கிடையாது. சாதாரண வலிநிவாரண மாத்திரைகளையே இவர்கள் போதை மாத்திரையாக பயன்படுத்துகின்றனர். அதாவது, மெத்தம்பேட்டமைன், நைட்ரசெபம், எபெட்ரின் மற்றும் டேபெண்டடோல் ஆகிய மாத்திரைகளை நீரில் போட்டு காய்ச்சி வடிக்கட்சி அந்நீரை பயன்படுத்துகின்றனர். இது அதீத அளவு எனர்ஜியை கொடுப்பதால் எந்த வேலையை செய்வதற்கும் இவர்களுக்கு துணவு கிடைத்துவிடுகிறது. இந்த போதையில்தான் குற்றங்களில் இளைஞர்கள் அதிகமாக ஈடுபடுகின்றனர்.
மருந்து சீட்டு
இது குறித்து மருந்துக்கடை உரிமையாளர்கள் கூறுகையில், "எங்களுக்கு தேவை மருந்து சீட்டுதான். ஆனால் ஆன்லைனில் சுலபமாக போலியான மருந்து சீட்டுக்களை தயாரித்துவிட முடியும். எது போலி எது நிஜம் என்பது எங்களால் கண்டுபிடிப்பது கடினம். எங்கள் கடைக்கு வழக்கமாக வரும் கஸ்டமர்கள் குறித்து எங்களுக்கு தெரியும். இதுபோன்ற வலி நிவாரணி மாத்திரைகளை அவர்கள் கேட்டால் மட்டும்தான் கொடுப்போம். அவர்கள் இல்லாமல் கொடுக்க மாட்டோம். இதனை தெரிந்துகொண்ட பெரும்பாலான இளைஞர்கள் அவர்களுடைய ஏரியாவில் உள்ள கடைகளில் இதனை வாங்க மாட்டார்கள். வெளியில் பிரபலமான மிகவும் கூட்டமான கடைகளில்தான் வாங்குவார்கள்" என்று கூறியுள்ளனர்.
கூரியர்
வலிநிவாரணி மாத்திரைகளை அனுமதியின்றி வழங்கியதாக கடைசி 5 மாதங்களில் 150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 9 மருந்து கடைகளுக்கு மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு சீல் வைத்துள்ளது. மேலும் 35 சில்லறை விற்பனையாளர்களின் உரிமத்தையும் ரத்து செய்திருக்கிறது. ஆனால் இருப்பினும் இந்த மாத்திரைகள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆன்லைன் மூலம் இந்த மாத்திரைகள் ஆர்டர் செய்யப்பட்டு பெறப்படுகிறது. மேலும், வெளி மாநிலங்களிலிருந்து கூரியர் மூலமாகவும் இது கடத்தப்படுகிறது. எனவே கூரியர் சேவை நிறுவனங்கள் மருந்து பொருட்களை அனுப்பும் நபர்களின் விவரங்களை முழுமையாக சேகரித்து வைக்க வேண்டும் என்றும், 5 ஆண்டுகள் வரை இந்த தகவல்கள் பேக்கப்பில் இருக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.