செஸ் ஒலிம்பியாட்: தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு.. 22000 போலீசார் குவிப்பு
சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை சென்னை வரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் வருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, 22 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
Recommended Video
இந்தியாவில் முதல் முறையாக இந்த ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. தமிழகத்தின் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 10 வரை நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரங்குகள் அமைக்கப்பட்டு வீரர்களுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 2 நாள் சுற்றுப்பயணம்
செஸ் ஒலிம்பியாட்டின் துவக்கவிழா நாளை மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அதன்பிறகு ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்த பிறகு மறுநாள் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதன்மூலம் 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்.

நாளை மாலை மோடி வருகை
அதாவது குஜராத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு நாளை மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் அடையாறு ஐஎன்எஸ். கடற்படை வளாகம் வரும் பிரதமர் மோடி அதன்பிறகு செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் நேரு உள் விளையாட்டு அரங்கம் செல்கிறார்.

5 அடுக்கு பாதுகாப்பு
பிரதமர் வருகையையொட்டி சென்னை மற்றும் அவர் செல்லும் சாலைகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்களுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. தேசியபாதுகாப்பு படையினர் (என்எஸ்ஜி) மத்திய-மாநில உளவு பிரிவு போலீசார், உள்ளூர் போலீஸ் அதிகாரிகள், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் ஆகியோர் 5 அடுக்கு காவல் பணியில் ஈடுபட உள்ளனர்.

22 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு
சென்னையில் மொத்தம் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். நேரு ஸ்டேடியம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. போலீசாரின் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications