இயக்குநர் கரு.பழனியப்பன் வைத்த கோரிக்கை.. 4 ஆண்டுகளுக்கு பின் நிறைவேற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புகழஞ்சலி நிகழ்ச்சியில், இயக்குநர் கரு.பழனியப்பன் வைத்த கோரிக்கையை 4 ஆண்டுகளுக்கு பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொண்டர்களோடு நெருங்கி பழகியவர். தொண்டர்களை நேரில் சந்திப்பதோடு மட்டுமல்லாமல், கட்சியின் நாளேடான முரசொலியில் தாம் எழுதும் கடிதங்கள் மூலம் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டவர். முரசொலியில் கருணாநிதி எழுதிய கடிதங்கள் மூலம் தொண்டனுடன் தனித்தனியே உரையாடுவதுபோன்ற உணர்வை ஏற்படுத்தியவர்.

’உடன்பிறப்பே’
உடன்பிறப்பே' என்று தொடங்கும் கருணாநிதியின் கடிதங்கள் கோபம், விமர்சனம், பாராட்டு, எதிர்ப்பு என எளிய மக்களுக்கும் புரியும் வகையில் எளிய வார்த்தைகளால் எழுதப்பட்டதாகும். அவரின் கடிதத்தை வாசிப்பதற்காகவே முரசொலியை திமுக தொண்டர்கள் வாங்கி படித்து வந்தனர். இந்நிலையில், கருணாநிதியின் 4,041 கடிதங்கள் அடங்கிய தொகுப்பு நூல்கள் வெளியிடப்படவுள்ளன.

கருணாநிதியின் கடிதங்கள்
விருதுநகர் பட்டம்புதூரில் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நூலைப் பெற்றுக் கொள்கிறார். 1968ம் ஆண்டு முதல் 2018 வரையில், திமுக தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதிய 4041 கடிதங்களின் தொகுப்பு நூல்களை சீதை படிப்பகத்தின் உரிமையாளர் கௌரா ராஜசேகரன் பதிப்பித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் 21,510 பக்கங்களில் கருணாநிதி எழுதிய அனைத்துக் கடிதங்களும் தொகுக்கப்பட்டு, 54 தொகுதிகளாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரு.பழனியப்பன் வைத்த கோரிக்கை
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவையடுத்து திரையுலகினர் சார்பாக கலைஞருக்கு புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு, கருணாநிதி மீதான அன்பை வெளிப்படுத்தினர். அந்த மேடையில் இயக்குநர் கரு.பழனியப்பன் பேசுகையில், கலைஞர் கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதிய கடிதங்களை புத்தகமாக வெளியிட வேண்டும். கருணாநிதியின் எழுத்துகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தார்.

நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்
தற்போது 4 ஆண்டுகளுக்கு பின் 1968 முதல் 2018 வரை தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதிய கடிதங்கள் புத்தகமாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இயக்குநர் கரு.பழனியப்பன் வைத்த கோரிக்கை, 4 ஆண்டுகளுக்கு பின் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த கரு.பழனியப்பன் பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications