மெட்ராஸ் பெயரை சென்னையாக மாற்றியது திமுக அரசு.. செம்மொழி தமிழ் விருது விழாவில் முதல்வர் பெருமிதம்
சென்னை: மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என்று மாற்றியது திமுக அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
2020, 2021, 2022ம் ஆண்டுகளுக்கான மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. முனைவர்கள் ம.ராஜேந்திரன், க.நெடுஞ்செழியன் மற்றும் ழான் லூயிக் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஆகஸ்ட் 22ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க நாள். சிங்கார சென்னையின் பிறந்தநாள். ஊரெங்கும் நம்ம சென்னை நம்ம பெருமை என்று கொண்டாடப்பட்டு வருகிறது. மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என்று மாற்றியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் மொழிக்கு, செம்மொழி அந்தஸ்து பெற கருணாநிதி எடுத்த முயற்சிகளை நாடு நன்கறியும்.
பிற மொழி உதவியின்றி தனித்து இயங்கக் கூடியது தமிழ் மொழி. செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை கொண்டு வந்தவர் கருணாநிதி. வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என வாழ்ந்தவர். 2010ல் கோவையில் நடைபெற்ற உலக செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க ஒருங்கிணைப்பாளராக இருந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாராட்டைப் பெற்றவர் முனைவர் ராஜேந்திரன். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் ராஜேந்திரன் கணையாழி இலக்கிய இதழின் பதிப்பாளராக விளங்கியவர். அவருக்கு கலைஞர் கருணாநிதி செம்மொழி விருது வழங்கப்படுவது மிகமிகப் பொருத்தம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications