மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம்! பாஜக, அதிமுக வெளிநடப்பு
சென்னை: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டசபையில், அரசின் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
3 சட்டங்களும் விவசாயிகள் நலனுக்கு உகந்தது இல்லை என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் இன்று சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
விவசாயத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் இன்றைய தினத்தில் பேரவையில் இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருந்தார் முதல்வர்.

விவசாய பட்ஜெட்
தமிழக அரசு இந்த ஆண்டு விவசாயத்திற்காக முதல் முறையாக தனி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. விவசாயத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், கடந்த 13ம் தேதி விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டை காணிக்கையாக்குகிறேன் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தனது உரையில் தெரிவித்தார்.
அப்போதே இது தேசிய அளவில் பரபரப்பு செய்தியானது.

முதல்வர் தீர்மானம்
இந்த நிலையில் இன்று, முதல்வர் தாக்கல் செய்த அரசினர் தனித் தீர்மானத்தில், "வேளாண் தொழில் பெருகவும், விவசாயிகள் வாழ்வு செழிக்கவும் இந்த அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, இம்மாநிலத்தின் வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்து, வேளாண்மைத் துறையின் பெயரினை வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை என மாற்றி ஒரு உயர்ந்த குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறது.

3 சட்டங்கள்
இந்நிலையில், கடந்த ஆண்டு ஒன்றிய அரசு விவசாயிகள் நலனுக்கு எதிராக கொண்டுவந்த சட்டங்கள் முறையே; (i) விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் (ஊக்குவிப்பு மற்றும் உதவுதல்) சட்டம், 2020; (1) விவசாயிகள் அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாத்தல்) விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்தச் சட்டம், 2020; (ii) அத்தியாவசியப் பொருட்கள் (திருத்தம்) சட்டம், 2020.

விவசாயிகள் நலனுக்கு எதிரானது
ஆகிய மூன்று சட்டங்களும் நமது நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும் விவசாயிகளின் நலனுக்கும் உகந்ததாக இல்லை என்பதால், அவை ஒன்றிய அரசினால் ரத்து செய்யப்படவேண்டும் என இந்தச் சட்டமன்றப் பேரவையில் நிறையேற்றப்படுகிறது." இவ்வாறு அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து தமிழகமும் இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

பாஜக வெளிநடப்பு
இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். விவசாயிகளுக்கு பலன் தருவதற்கு கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது சரியில்லை என்று நயினார் நாகேந்திரன் பிறகு நிருபர்களிடம் தெரிவித்தார். இதேபோல எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவும் வெளிநடப்பு செய்தது.












Click it and Unblock the Notifications