களத்திற்கு வரும் முதல்வர்! 2 நாளில் 3 மாவட்டங்களில் சுற்றுப் பயணம்! பிரதமர் மோடியுடன் சந்திப்பு!
சென்னை : சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் கோவை செல்லும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாட்களில் 3 மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நாளை மறுதினம் திண்டுக்கல்லில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதுகு வலி பிரச்சனை காரணமாக அவதி அடைந்தார். இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் முதல்வரின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்த நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது. அதே நேரத்தில் வீட்டில் இருந்தபடியே முதல்வர் ஸ்டாலின் பல்வேறு பணிகளை மேற்கொண்டார்.

முதல்வர் ஸ்டாலின்
முதுகு வலி பிரச்சனை காரணமாக முதல்வர் ஸ்டாலின் நீண்ட தூர பயணங்களை தவிர்க்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொள்ளவில்லை என தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை அடுத்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் தமிழக மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு, ஐ பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்.

மீண்டும் சுற்றுப் பயணம்
இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை செல்லும் முதல்வருக்கு திமுகவினர் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டு இருக்கின்றனர். இதையடுத்து இரண்டு நாள் பயணமாக மூன்று மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். நாளை மாலை விமானத்தில் இருந்து கோவை செல்லும் அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக ஈரோடு செல்கிறார். அங்கு திமுக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

கரூர் நிகழ்ச்சி
அதன் பின்னர் கரூர் செல்லும் முதல்வருக்கு கரூர் மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. இரவு கரூரிலேயே தங்கும் முதல்வர் ஸ்டாலின் 11ஆம் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட தடா கோவில் பகுதியில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் சுமார் 20 ஆயிரம் பேர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திண்டுக்கல் பயணம்
தொடர்ந்து அங்கு இருந்து புறப்படும் முதல் ஸ்டாலின் திண்டுக்கல் செல்கிறார். கரூர் நான்கு வழிச்சாலையில் திண்டுக்கல் திமுக சார்பில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. அன்று மாலை திண்டுக்கல் மதுரை சாலையில் சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராமிய பல்கலைக்கழக 36 வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்.

பிரதமருடன் சந்திப்பு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியட் தொடர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் பிரதமர் நரேந்திர மோடியும் ஒரே மேடையில் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து சில மாத இடைவெளிக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடியும் முதல்வர் ஸ்டாலினும் மீண்டும் சந்தித்துக் கொள்ள இருக்கின்றனர். இதை அடுத்து திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் சுமார் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். பிரதமரை வரவேற்க பாஜகவினரும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க திமுகவினரும் தயாராகி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications