கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி - முதல்வர் சூப்பர் அறிவிப்பு
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய ரூ. 12,110 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்து முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 16.13 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்.
சென்னை: கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்காக கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய விவசாய கடன்களை முதல்வர் பழனிச்சாமி தள்ளுபடி செய்துள்ளது. ரூ. 12,110 கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதன் மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்.
Recommended Video
சட்டசபையில் இன்று முதல்வர் பழனிச்சாமி விதி எண் 110ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், குடிமராமத்து மற்றும் பல்வேறு நீர்ப்பாசன மேம்பாட்டு திட்டங்கள் மூலம் சிறப்பான நீர் மேலாண்மை திட்டங்கள், வேளாண் தொழில் செழிக்க நுண்ணீர்ப் பாசனம், ஒருங்கிணைந்த பண்ணையம், கூட்டுப் பண்ணையம், வேளாண் விற்பணை மையங்கள் மேம்பாடு, காய்கறி, பழங்கள் சாகுபடியை ஊக்குவிக்க சந்தை தொடர் கட்டமைப்புத் திட்டம், உயர்தொழில்நுட்ப சாகுபடி, பயிர் காப்பீட்டுத் திட்டம் எனப் பல்வேறு திட்டங்கள் அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
விவசாயம் சார்ந்த தொழில்களான கால்நடை பராமரிப்பு, மீன்வளம் போன்ற துறைகளிலும் வியக்கத்தக்க முன்னேற்றத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான், மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் கால்நடைத் துறையின் பங்கும் அதிகரித்து வருகிறது. விவசாயிகள் துயர் ஏற்படும்போதெல்லாம், அரசு உதவிக்கரம் நீட்டி, அவர்களைக் காப்பதில் முன்னிலையில் இருந்து வருகின்றது. அதனால்தான், 2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிப்பொறுப்பை ஏற்ற உடன், 31.3.2016 வரை நிலுவையில் இருந்த 5,318.73 கோடி ரூபாய் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் 12.02 லட்சம் சிறு, குறு விவசாயிகள் பயன்பெற்றனர்.
2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக இழப்பைச் சந்தித்த விவசாயப் பெருமக்களுக்கு 2,247 கோடி ரூபாய் வறட்சி நிவாரணத் தொகையாக அரசு வழங்கியது. இதைத் தொடர்ந்து, விவசாயிகளின் வாழ்வு செழிக்க, பல்வேறு நலத்திட்டங்களும், வேளாண் கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்களும் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 2019-20 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியது. இந்நிலையில், விவசாயமும் பாதிப்புக்கு உள்ளாகியதுடன், தொடர்ந்து ஏற்பட்ட நிவர், புரெவி போன்ற புயல்களும், அதைத் தொடர்ந்து, சென்ற மாதம் பருவம் தவறிப் பெய்த கடும் மழையும், பெருத்த பயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியதால், கடன் பெற்று பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் அல்லலுக்கு உள்ளாகினர்.
இந்தப் பேரிடர், அறுவடைகளுக்குத் தயாராக இருந்த நெல், கரும்பு, வாழை, தோட்டப் பயிர்களை மட்டுமல்லாது, மானாவாரி பயிர்களையும் பெருமளவில் சேதப்படுத்தியது. வேளாண் பெருமக்களின் நலனில் என்றும் அக்கறை கொண்டுள்ள அரசு, மத்திய அரசின் நிதி விடுவிப்பையும் எதிர்பாராமல், சாகுபடி செய்த பயிர்களுக்கான இடுபொருள் உதவித்தொகை 1,717 கோடி ரூபாயை 16.43 லட்சம் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க உத்தரவிட்டு, அந்தத் தொகையையும் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்த இடுபொருள் உதவித்தொகையானது, விவசாயிகளின் துயரைத் துடைத்தாலும், அவர்கள் மீண்டும் பயிர்த்தொழிலைத் தொடர உதவ வேண்டும் என்று மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு எண்ணியது. மேலும், விவசாயிகள், பல்வேறு விவசாய சங்கங்கள், சாகுபடி பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பெருத்த சேதத்தைக் கருத்தில் கொண்டு, நிலுவையில் உள்ள பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
கீழே விழுந்தவர்களை மேலே தூக்கி விட்டால் மட்டும் போதாது, அவர்கள் மேலும் வலுப்பெற உதவி செய்திட வேண்டும் என்ற உயரிய சிந்தனையில், அரசு செயல்பட்டு வருகின்றது. எனவே, தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, 31.1.2021 அன்றைய நிலவரப்படி, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 இலட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாயையும் தள்ளுபடி செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் சொன்னார்.. எடப்பாடியார் அதற்குள் செய்து விட்டார்.. அதிமுகவுக்கு கிடைத்த பிரம்மாஸ்திரம்!
சட்டசபைத் தேர்தல் வர உள்ள நிலையில் அதிமுக அரசு மீண்டும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பயிர்கடன் தள்ளுபடிக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியான, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடனும் திமுக ஆட்சி அமைந்தவுடன் தள்ளுபடி செய்யபடும் என்று மு.க ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார். இந்த நிலையில் இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிக்கை வாசித்த முதல்வர் பழனிச்சாமி, கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய 12,110 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
கடன் தள்ளுபடி மூலம் 16.43 லட்சம் விவசாயிகளின் மனதை குளிர வைத்துள்ளார். கொரோனா காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார். எதிர்கட்சியினர் சொன்னதை செய்து முடித்திருக்கிறார் முதல்வர் பழனிச்சாமி.