அபயக்குரல் கேட்டால் கந்தனைப்போல காட்சித்தருவார் முதல்வர்... சொல்வது அமைச்சர் சேகர்பாபு
அபயக்குரல் கேட்டால் அங்கே கந்தனைப்போல முதல்வர் காட்சி தருவார் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை: எங்கு அபயக்குரல் கேட்டாலும் கந்தன்போல் அங்கு முதல்வர் காட்சி தருவார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். கொரோனா தொற்றின் காரணமாகத்தான் முதல்வர் மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் தியாகராஜர் கோவிலுக்குச் சொந்தமான கமலாலய குளத்தின் தென்கரை சுவர் கனமழையால் இடிந்து விழுந்தது. இதனை பார்வையிட வந்த இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசினார்.

முதல்வரின் உத்தரவுபடி விரைவில் இடிந்த பகுதி சரி செய்யப்படும் என்று கூறினார். இந்த குளத்தில் இருமுறை சுவர் சரிந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த குளத்தின் நான்கு கரைகளிலும் உள்ள சுவரை வல்லுநர்கள் குழு வைத்து ஆராய்ந்து போதிய அளவு நிதியை பெற்று நிரந்தரமாக சரிசெய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சரி செய்யப்படும் என்று கூறினார்.
கமலாலயக் குளம் சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்பட்டு படகு சவாரி உள்ளிட்டவை செயல்படுத்தப்படும். அதேபோல் குளத்திற்கு வரக்கூடிய நீர்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
இந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை மாவட்ட நிர்வாகம் சரி செய்யும் என்று கூறிய அமைச்சர் சேகர்பாபு, கல்லுத்தேர் சுற்றி மரம், செடி வைக்கும் பணி முடிவுற்றுள்ளது. 100 ஆண்டு பழமை வாய்ந்தது என்பதால் நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நீதிமன்ற அனுமதிக்காக காத்திருக்கிறோம் என்றார்.
ஓடாத 65 தங்கத் தேர் 49 வெள்ளி தேர்கள் இந்த ஆட்சியில் ஓட விடப்பட்டுள்ளது என்று கூறிய சேகர்பாபு, எங்கு அபயக்குரல் கேட்டாலும் கந்தன்போல் அங்கு முதல்வர் காட்சி தருவார் என்று கூறினார்.
கொரோனா தொற்றின் காரணமாகத்தான் முதல்வர் மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆலயங்களில் முதலில் நான்கு நாள் தரிசனம் மட்டுமே இருந்தது தற்போது ஏழு நாட்கள் தரிசனமாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் கண்டு பிடித்த சிலைகள் எத்தனை சதவீதம் என எடுத்துக்கொண்டால் அவர்கள் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளை விட 40 சதவீதத்திற்கும் அதிகமாக ஆறு மாதத்தில் திமுக ஆட்சியில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications