கன மழை + வெயில்.. தமிழகம் உட்பட.. தென் மாநிலங்களில் மாறப்போகும் வானிலை.. எச்சரிக்கும் ஆய்வு!
சென்னை: தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் அடுத்த 30 ஆண்டுகளில் கனமழை அதிகரிக்கும் என்றும் வெப்பமும் 2 டிகிரி வரை அதிகரிக்கும் என்றும் புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து காலநிலை மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் எதிர்பாராத மழையால் தமிழ்நாடே வெள்ளக்காடானது. இதுபோன்ற நிகழ்வுகள் அண்டை மாநிலங்களிலும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதையடுத்து காலநிலை மாற்றம் குறித்து பலதரப்பட்ட ஆய்வுகள் நடந்துவருகின்றன. 'காலநிலையில் மாவட்ட அளவிலான மாற்றங்கள்: இந்தியாவின் தென் மாநிலங்களுக்கான வரலாற்று காலநிலை மற்றும் காலநிலை மாற்ற கணிப்புகள்' என்ற தலைப்பிலான ஆய்வு ஒன்றை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

தென்னிந்தியா
இந்த ஆராய்ச்சியில், 1991 மற்றும் 2019 க்கு இடைப்பட்ட காலகட்டத்தின் காலநிலை முறைகளை ஆய்வு செய்திருக்கிறார்கள். இந்த ஆய்வின் அடிப்படையில் தென்னிந்தியாவில் ஏற்படக்கூடிய நிகழ்வுகளின் கணிப்புகளை உருவாக்கி உள்ளனர். இதில் தென்னிந்தியாவில் அடுத்த முப்பது ஆண்டுகளில் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு காலநிலை மாற்றம் ஏற்படும் என தெரியவந்துள்ளது.

காலநிலை
ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து தென் மாநிலங்களின் அனைத்து மாவட்டங்களையும் காலநிலை மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் காலநிலை மாற்றத்தை முன்வைக்கும் ஒரு பெரிய ஆய்வாக இது இருக்கும். "கடந்த முப்பது ஆண்டுகளில் (1991-2019) வெப்பநிலை மற்றும் மழையளவு அதிகரித்துள்ளது அனைத்து தென்னிந்திய மாநிலங்களிலும் மழைப்பொழிவில் அதிக மாறுபாட்டைக் காண்கிறோம்.

அதிகரிக்கும் மழை
அதேபோல், அடுத்த முப்பது ஆண்டுகளில் காலநிலை கணிப்புகள் பெரிய அளவில் மாற்றம் இருக்கும். வருடத்தின் அனைத்து காலங்களும் மாறும். கோடை, குளிர், மழை எல்லாம் இனி வரும் காலங்களில் அதிகரிக்கும். மழை நாட்களில் தற்போது பதிவாவதைவிட கூடுதலாக 2.5 மிமீக்கு மழை பெய்யும். தென் மாநிலங்களின், அனைத்து மாவட்டங்களிலும் அதிக மழை பதிவாகக்கூடும் என்று இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

வெப்பம்
கோடையில் அதிகபட்ச வெப்பநிலை 0.5°C முதல் 1.5°C வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிந்தியாவின் பெரும்பாலான மாவட்டங்களில் குளிர்கால குறைந்தபட்ச வெப்பநிலை 1°C முதல் 2°C வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை தாண்டியும் டிசம்பர் வரை மழைப்பொழிவு 2030-களில் தென்னிந்தியா முழுவதும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்று இந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications