பஞ்சாயத்துக்கெல்லாம் காரணம் "மஞ்ச" சட்டைகாரர்தான்.. குழுவில் இல்லாவிட்டாலும்.. சும்மா இருக்கமாட்டாரே
ராஜேந்திர பாலாஜியின் பேச்சுதான் முதல்வர் வேட்பாளர் விவகாரத்துக்கு காரணம் என்கிறார்கள்
சென்னை: இதுக்கெல்லாம் யார் காரணம் தெரியுமா.. ராஜேந்திர பாலாஜி அன்று பேசிய பேச்சுதான் என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.. அதனால்தான், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு குழுவில்கூட அவர் பெயர் இடம்பெறவில்லை என்கிறார்கள்.
தமிழக அரசியலில் கிட்டத்தட்ட 10 நாட்களாகவே அசாதாரண சூழல் நிலவி வந்தது.. சொந்த கட்சி விவகாரம் என்பதால், கூட்டணி கட்சிகள் இதை பற்றி வாய் திறக்கவில்லை.
இன்னொரு பக்கம் ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல திமுகவும் நடந்த சம்பவங்களை வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருந்தது. இன்று ஒரு சுமூக நிலை எட்டப்பட்டுள்ளது.. வழிகாட்டிகுழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் வேட்பாளர் அறிவித்துவிட்டதால் எடப்பாடியார் சாதித்துவிட்டார் என்பதா? அல்லது வழிகாட்டி குழுவை நியமித்துவிட்டதால் ஓபிஎஸ் சாதித்துவிட்டார் என்பதா தெரியவில்லை.. ஆனால், இந்த விவகாரத்தை அன்று கிளப்பியதே சாட்சாத் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான்!
சில மாதங்களுக்கு முன்பு இவரது பதவியை பிடுங்கி, மறுபடியும் அவரிடத்தில் தந்தார் முதல்வர் எடப்பாடியார்.. அப்போதிருந்தே கொஞ்சம் சூடாகவே பேச தொடங்கினார் அமைச்சரும்... "திமுக இனி கதம் கதம்" என்று சொன்னாலும், "2021 தேர்தலை எடப்பாடியாரை மையமாக வைத்துதான் சந்திப்போம். அவரே அடுத்த முதல்வர்" என்பதையே தொடர்ந்து சொல்லி வந்தார்.. அப்போதே இது ஓபிஎஸ் தரப்புக்கு எரிச்சலை தந்ததாக சொல்லப்பட்டது.
சொந்த செலவில் தொகுதிக்குள் நிவாரண உதவிகளை அமைச்சர் தந்து வரும்போதெல்லாம் முதல்வரை எடப்பாடியாரின் புகழைதான் பாடி வந்தார்.. ஆட்சியின் நல்ல திட்டங்களை சொல்லாமல், அடுத்த முதல்வர் எடப்பாடியார் என்று சொல்லியதுதான், சர்ச்சையை கிளப்பியது.. சும்மா இருந்த ஓபிஎஸ்-க்கு தேவையில்லாத எரிச்சலை தந்தது.. முதல்வரும் ராஜேந்திர பாலாஜியை எதுவுமே சொல்லவில்லை.. ஒருவேளை கண்டித்திருந்தால் இன்றைக்கு இந்த விவகாரம் இந்த அளவுக்கு வெடித்து வந்திருக்காது என்றும் சொல்லப்பட்டது.
அன்னைக்கு இவர் பேசிய பேச்சோ என்னவோ, இன்னைக்கு வழிகாட்டு குழுவில் ராஜேந்திர பாலாஜியின் பெயரே காணோம்.. இத்தனைக்கும் இவர் பாஜக அமைச்சரா? அதிமுக அமைச்சரா என்று கேட்க கூடிய அளவுக்கு பாஜகவுடன் உறவு கொண்டிருப்பவர்.. அப்படி இருந்தும் இன்று இவர் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார் என்றால், என்ன காரணம்? பாஜகவின் அதிருப்தியை மறைமுகமாக சம்பாதிக்க அதிமுக தயாராகிவிட்டதா? அல்லது ஓபிஎஸ்-ன் கைங்கர்யத்தால்தான் லிஸ்ட்டில் அமைச்சர் பெயர் இடம் பெறவில்லையா என தெரியவில்லை.
இவ்வளவு நாளும் செம கடுப்பில் இருந்த ஓபிஎஸ், இனி நிச்சயம் அமைச்சரின் போக்கை சற்று கண்காணிக்கவும், எல்லை மீறாமல் பார்த்து கொள்ளவும் செய்வார் என்றே சொல்லப்படுகிறது.. அதேசமயம், ராஜேந்திர பாலாஜியையும் லேசில் எடைபோட்டு விட முடியாது.
இவர், தீவிரமான எடப்பாடி ஆதரவாளர் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று.. ஓபிஎஸ்ஸை சீண்டிக்கொண்டே இருந்தவர் என்பதும் வெட்ட வெளிச்சமான ஒன்று.. இப்போது லிஸ்ட்டில் பெயரும் இடம்பெறவில்லை என்பதால், நிச்சயம் பொதுவெளியில் இருந்தபடி ஓபிஎஸ்ஸை அவர் சீண்டும் வேலை குறையாது என்றும் சொல்கிறார்கள். ஆக மொத்தம், அதிமுகவுக்கு பஞ்சாயத்து திமுகவில் இல்லை.. அதிமுகவுக்குள்ளேயேதான் குவிந்து கிடக்கிறது!