"சிக்னல்".. இரவு 9 மணிக்கு ஓபிஎஸ் வீட்டுக்கு போன எடப்பாடியார்.. பம்பரமாக சுழலும் தென்னக அதிமுக
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் வீட்டிற்கு வருகை தந்திருந்தார்
சென்னை: துணை முதல்வரின் போடி தொகுதியில், சிலகுறிப்பிடத்தக்க நிகழ்வுகள் ஆரம்பமாகி இருக்கிறதாம்.. அதற்கு காரணம், தமிழக முதல்வரின் செயல்பாடுகள்தான் என்று பூரித்து போய் சொல்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்..!
2 நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர், போடியில் ஓபிஎஸ்ஸுக்காக பிரச்சாரம் செய்தார்.. தமிழகம் முழுவதும் முதல்வர் பிரச்சாரம் செய்து வந்தாலும்கூட, இந்த பிரச்சாரம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது..!
வழக்கம்போல, திமுகவை சாடிய முதல்வர், ஓபிஎஸ் இதுவரை தொகுதிக்கு செய்த வளர்ச்சி திட்டங்கள் குறித்து லிஸ்ட் போட்டு பாராட்டினார்.. பிரச்சாரம் முடிந்ததும், போடி சுப்புராஜ் நகரில் இருக்கும் தன் வீட்டுக்கு இரவு சுமார் 9 மணியளவில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து வந்து உபசரித்தார் ஓபிஎஸ்.. துணை முதல்வரின் மொத்த குடும்பமும் எடப்பாடியாரை ஏகபோகத்துக்கு உபசரித்து கவனித்தது.

அம்மா
நடக்க முடியாமல் சேரில் உட்கார்ந்திருந்த துணை முதல்வரின் அம்மாவை எடப்பாடியார் நேரில் சென்று சந்தித்து அவரது கைகளை இறுக பற்றி கொண்டார்.. அம்மாவும், முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் நெற்றியில் விபூதி வைத்து "நல்லா இருங்கப்பா" என்று ஆசீர்வதித்தார்.. பிறகு ஓபிஎஸ்ஸின் இரு மகன்களும், எடப்பாடியாரை பெரியப்பா பெரியப்பா என்று அழைக்க, இவர்களின் பிள்ளைகளும் தாத்தா தாத்தா என்று கட்டியணைக்க, அந்த வீடே முழு நெகிழ்ச்சியில் சிறிது நேரம் மூழ்கிகிடந்தது.. இயற்கையிலேயே பாசத்துக்கு கட்டுப்பட்ட எடப்பாடியாரும், இந்த அன்பு மழையில் சேர்ந்தே நனைந்தார்.

விபூதி
இதற்கு பிறகுதான், முதல்வருக்கு ஓபிஎஸ்ஸின் அம்மா விபூதி வைத்த போட்டோ சோஷியல் மீடியாவில் ஷேர் ஆனது.. அதேபோல, முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை ஓபிஎஸ் இளையமகன் ஜெயபிரதீப் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். அதில் , 'எனது அப்பத்தா பாசத்திற்குரிய ஓ.பழனியம்மாள் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆகியோரை வாழ்த்தி ஆசீர்வாதங்களை வழங்கினார்' என்று குறிப்பிட்டிருந்தார்.

அதிமுக
இதையெல்லாம் சாதாரண நிகழ்வாக எடுத்து கொண்டு கடந்துவிட முடியாது என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள் சிலர்.. அதுமட்டுமல்லாமல் இந்த போட்டோக்கள் பெரும் தாக்கத்தை தேனி அரசியலிலும் ஏற்படுத்தியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.. கடந்த ஓராண்டாகவே இரட்டை தலைமை விவகாரம், முதல்வர் வேட்பாளர் விவகாரம் ஓடிக் கொண்டிருந்தது.. முதல்வரும், துணை முதல்வரும் வெளிப்படையாகவே இந்த பனிப்போரை நடத்தினார்கள்.. ஆளுக்கு ஒரு பக்கம் கோபித்து கொண்டு போக, மூத்த அமைச்சர்கள் சிலர் இவங்க 2 பேரையும் சமாதானப்படுத்திய நிகழ்வுகளையும் தமிழ்நாடு கண்கூடாக கண்டது.

பரபரப்பு
இதற்கு பிறகு, தேர்தல் பரபரப்பு ஆரம்பிக்கவும், ஓபிஎஸ் தனி ராஜாங்கம் நடத்துவதாகவும், தனிப்பட்ட முறையில் செலவு செய்து பக்கம் பக்கமாக விளம்பரங்களை தந்து வருவதாகவும், அதில் தன்னையும், தன் 10 வருட சாதனையையும் முன்னிறுத்தியே விளம்பரங்கள் தரவும், அது மேலும் களத்தை சூடாக்கியது.. மற்றொரு பக்கம் சசிகலா விஷயத்தில் கடந்த 3 மாதமாக ஓபிஎஸ் வாய் திறக்காமல் மவுனம் காத்ததும், மேலும் சில அதிருப்திகளும் வெடித்தன.

கணிப்பு
இதைதவிர ஓபிஎஸ்ஸுக்கு சொந்த தொகுதியிலேயே இந்த முறை வெற்றி பெறுவதில் லேசான சிக்கல் இருப்பதாவும், தங்கம் தமிழ்செல்வனுக்கு ஆதரவு இருப்பதாக சில கருத்து கணிப்புகள் மூலம் வெளிவந்த தகவல்கள் போன்றவை எல்லாமே ஓபிஎஸ்ஸை சற்று கலக்கத்தில் ஆழ்த்தியதாகவும் சொல்லப்பட்டது.

சுறுசுறுப்பு
இப்படிப்பட்ட நேரத்தில்தான், துணை முதல்வர் வீட்டில் எடப்பாடியாரின் நெருக்கம், பிணைப்பை பார்த்ததுமே தென்மண்டல அதிமுக சுறுசுறுப்பாகிவிட்டதாம்.. இவர்கள் இருவருக்குள்ளும் நிலவி வந்த பூசல் காரணமாகத்தான், தொகுதியில் சுணக்கத்துடன் அதிமுகவில் சிலரும், எடப்பாடி ஆதரவாளர்களும் வேலை செய்யாமல் கிடந்தனராம்.. இப்போது அப்படி இல்லாமல் அனைவருமே ஒன்று சேர்ந்து களப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும் நல்ல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இணக்கம்
அதுமட்டுமல்ல, முதல்வர் - துணை முதல்வருக்கு இடையேயான விரிசலை வைத்து அரசியல் செய்ய திமுகவுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்பதிலும் தென்மண்டல அதிமுக உஷாராக இருந்து வருகிறது. தேனி தென்மாவட்டங்களில் அதிருப்தியில் ஒதுங்கியும், வேலை பார்க்காமலும் இருந்த இபிஎஸ் ஆதரவாளர்களும் தீயாக வேலை பார்க்கத் தொடங்கிவிட்டனராம்..!












Click it and Unblock the Notifications