போச்சு.. "விவசாய கடன் தள்ளுபடி".. நொறுங்கி போன திமுக கனவு.. அடுத்து என்ன செய்யும்?
நொறுங்கி போய்விட்டது திமுகவின் இன்னொரு கனவும்
சென்னை: இன்றைக்கு வேறு விதமான அரசு அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென விவசாய கடனை எடப்பாடி பழனிசாமி தள்ளுபடி செய்து அறிவித்துள்ளார்.. இது திமுகவுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 2006-ல் திமுக ஆட்சியில், 7,000 கோடி ரூபாய் விவசாய கடனை ரத்து செய்து கலைஞர் கையெழுத்து போட்டார்.. அதற்கு பிறகு பெரிய அளவிலான விவசாய சலுகைகள் எதுவும் மக்களுக்கு கிடைக்கவில்லை..
இந்த 15 வருடத்தில் 3 முறை தேர்தலையும், இடைத் தேர்தல்களையும் எம்பி தேர்தல்களையும் சந்தித்தும், அந்த அளவுக்கு விவசாயிகளின் கடன்களில் கை வைக்கப்படவில்லை.
கடன் ரத்து
இப்படிப்பட்ட சூழலில், இந்த முறை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற வீரியத்துடன் திமுக களம் இறங்கி உள்ளது.. அதனால் ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் கடனை ரத்து செய்யும்படி விவசாயிகள் சொல்லி கொண்டே இருந்தனர்.. இந்த கடன் மட்டும் கோடிக்கணக்கில் இருப்பதால் விழி பிதுங்கி இருக்கும் மக்களுக்கு, நம்பிக்கை வார்த்தைகளை ஸ்டாலினும் தந்திருந்தார்..
தைரியம்
"அடுத்த ஆட்சி நாமதான்.. அதனால தைரியமா இருங்க.. மொத்த கடனையும் தள்ளுபடி செய்யறதுக்கான வழியை திமுக நிச்சயம் எடுக்கும்" என்றார்.. ஏற்கனவே ஸ்டாலினின் கல்வி கடன் ரத்து போன்றவை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுவிட்ட நிலையில், இந்த அறிவிப்பும் டெல்டா மக்களை குளிர வைத்து வந்தது.
டெல்லி
இதைதான் எடப்பாடியார் கையில் எடுத்தார்.. தான் ஒரு உண்மையான விவசாயி என்று சொல்லி வரும் நிலையில், குறிப்பாக டெல்லி விவசாயிகள் விஷயத்தில் எதிர்நிலைப்பாட்டை கொண்டிருப்பதால், சற்று அதிருப்தி நிலவ தொடங்கியது.. இதை போக்கும் வகையிலும், டெல்டா மக்களின் ஓட்டுக்களை அப்படியே கொக்கி போட்டு எடுக்கும் வகையிலும், திமுகவுக்கு சறுக்கல் தரும் வகையிலும், விவசாயிகளுக்கு ஏதாவது செய்ய நினைத்தார் எடப்பாடியார்.
தள்ளுபடி
இதனடிப்படையில் அதிகாரிகளுடனும் ஆலோசனை செய்தார்.. அதை ஒரு கோரிக்கையாகவும் லிஸ்ட் தயார் செய்யப்பட்டு டெல்லிக்கு சென்றார்... அங்கு பிரதமர், நிதியமைச்சருடன், விவசாய கடன்தள்ளுபடி குறித்து எடுத்துரைத்திருக்கிறார்.. எப்படியும் அதிமுக கூட்டணியில்தான் பாஜகவும் இடம்பெற போவதால், இந்த அறிவிப்பு மூலம் மக்களின் பேராதரவு கிடைத்தால், அது தங்களுக்கும் பலம் என்றே பாஜக மேலிடம் கணக்கு போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சிக்கல்
இப்போது, சிக்கல் என்னவென்றால், மக்களுக்கு எந்தவித வாக்குறுதிகளையும் திமுக தருமா என்பதுதான்.. எதையெல்லாம் ஸ்டாலின் அடுத்த 4 மாசத்தில் செய்து தரப்படும் என்று சொல்லி வருகிறாரோ, இந்த 4 மாசத்துக்குள்ளேயே எடப்பாடியார் அதை செய்து காட்டி விடுகிறார்.. இப்படித்தான் அரசு ஊழியர்கள் போராட்டத்தை, எடப்பாடியார் முறியடித்தார்.. அவர்களுக்கு சலுகைகளை அள்ளி தந்தார்.. அதாவது, ஸ்டாலின் புள்ளி வைத்தால் எடப்பாடியார் கோலம் போட்டு கொண்டே வருகிறார்!
வாக்குறுதிகள்
இனி உச்சக்கட்ட பிரச்சாரம் நடக்க உள்ளதால், மக்களிடம் வாக்குறுதிகளை சொல்லாமல் ஓட்டுக் கேட்க முடியாது.. அதேசமயம், அதிமுக நிறைவேற்றாத ஏதேனும் உள்ளதா? இந்த 4 மாதத்துக்குள் எந்த மாதிரியான அறிவிப்பை ஆளும் தரப்பினால், எளிதாக வெளியிட முடியாதோ, அறிவிக்க முடியாதோ, அத்தகைய விஷயங்களை கையில் எடுக்க திமுக யோசித்து வருகிறதாம்..!