"ஜாதி".. முதல்முறையாக.. சசிகலாவுக்கு எதிரான அஸ்திரத்தை கையில் எடுக்கும் எடப்பாடியார்.. இனி என்னாகும்
முக்குலத்தோர் வாக்கினை முழுவதுமாக பெற எடப்பாடியார் தரப்பு வியூகம் அமைத்து வருகிறது
சென்னை: முதல்முறையாக சசிகலாவுக்கு எதிரான அஸ்திரத்தை எடப்பாடியார் கையில் எடுக்க போகிறார் என்ற பரபரப்பு தகவல் கசிந்து வருகிறது.. அது தேர்தலில் ஜாதீய ஓட்டுக்களை குறி வைத்துதான் என்பதும் தெரியவருகிறது.
எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவுக்கு முக்குலத்தோர் வாக்கு வங்கி என்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.. எம்ஜஆர் இருந்தபோதும் சரி, ஜெயலலிதா இருந்தபோதும் சரி, தங்களுக்கென மாஸ் கூட்டத்தை திரட்டி வைத்திருந்தாலும், முக்குலத்தோர் வாக்கையே பிரதானமாக கருதினர்.. அதனால்தான், அவர்கள் இருவருமே ஆண்டிப்பட்டியில் தேர்தலை சந்தித்தனர்.
அதன்படியே அந்த சமுதாய வாக்கையும் மொத்தமாக அள்ளினர்.. அதன்பிறகு, அதிமுகவில் அதிகாரம் பொருந்திய நபர்கள், அமைச்சர்கள் எல்லாம் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்ற நிலைமையும் மாறியது... இது ஜெயலலிதா உயிரோடு இருந்தவரையும் நீடித்தது.

ஜெயலலிதா
ஆனால் எடப்பாடியார் பொறுப்புக்கு வந்தபிறகு, முக்குலத்தோர் சமுதாய பிரதிநிதித்துவம் குறைந்து, கொங்கு மண்டலத்தை சேர்ந்தோர் பதவி அதிகாரம் பெற்றனர்.. இப்போதுகூட முதலமைச்சருக்கு நெருக்கமானவர்கள் கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்களாகவே உள்ளனர்.. ஆனால், எடப்பாடியாருக்கு இது சாதகமாக இருந்து வந்தாலும், அதிமுகவுக்கு இது அவ்வளவு நல்லது இல்லை என்ற முணுமுணுப்புகள் சில மாதங்களுக்கு முன்பே எழ தொடங்கிவிட்டது.

முக்குலத்தோர்
இப்போது தேர்தல் நெருங்கும் சூழலில், முக்குலத்தோர் சமுதாய வாக்கை கணிசமாக அதிமுக இழக்க வேண்டிய நிலைமையும் உருவாகி வருகிறது.. முக்கியமாக முக்குலத்தோருக்கான பிரதிநித்துவத்தை பிரதானமாகக் கொண்ட கட்சியாக அமமுக இருக்கிறது.. சசிகலா இருந்தபோது, தன்னை சேர்ந்தவர்களையே பொறுப்பில் வைத்திருக்க செய்தார்.. இப்போதும்கூட சசிகலா சிறையில் இருந்தாலும், அவருக்கான ஆதரவு வாக்குகள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன.. வேண்டுமானால், டிடிவி தினகரன் அதனை வளைத்து போடக்கூடும்..

அமமுக
இதற்கு உதாரணம், கடந்த தேர்தல்களில் அமமுக பெற்ற வாக்கு வங்கிதான்.. எம்பி தேர்தலாகட்டும், இடைத்தேர்தல் ஆகட்டும், அமமுகவுக்கு உதவியது இந்த முக்குலத்தோர் வாக்குதான்.. இதே வாக்குதான் அதிமுகவின் வெற்றிவாய்ப்பில் பாதிப்பையும் ஏற்படுத்தியது.. அதனால், இந்த முறையும் முக்குலத்தோர் வாக்கை இழந்துவிடக்கூடாது என்று உஷாராகி உள்ளது எடப்படியார் தரப்பு.

காவிரி டெல்டா
தென் மாவட்டங்களிலும் சரி, காவிரி டெல்டா மாவட்டங்களில் சரி, கணிசமாக இருக்கும் முக்குலத்தோர் சமுதாய ஓட்டுக்களை அப்படியே சிந்தாமல், சிதறாமல் அள்ள எடப்பாடியார் தரப்பு கணக்கு போட்டு வருகிறதாம். இதற்கு 2 காரணங்கள் சொல்லப்படுகின்றன.. ஒன்று, முக்குலத்தோர் வாக்கை தன்பக்கம் இழுக்காவிட்டால், முக்கிய புள்ளிகள் ஓபிஎஸ் பக்கம் அணி திரளவும், அதன்மூலம் கட்சிக்குள் தேவையில்லாமல் சிக்கல் வரவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

டிடிவி தினகரன்
மற்றொன்று, டிடிவி தினகரனை பொறுத்தவரை இப்போதைக்கு கட்சி நிர்வாகிகளுடன் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியே இருக்கிறார்.. இதை சரியாக பயன்படுத்தி கொண்டு, உள்ளேநுழைந்து வாக்குகளை திசை திருப்பிவிட வேண்டும் என்பதையே எடப்பாடி தரப்பு யோசிக்கிறதாம்.. அதுமட்டுமல்ல, இதற்காகவே அமமுக முக்கிய புள்ளிகளை தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. ஆக மொத்தம், சசிகலா வெளியே வருவதற்குள், அவருக்கு ஆதரவான வாக்குகள் எடப்பாடியார் பக்கம் சாய்ந்திருக்க வாய்ப்புகள் உள்ளதாகவே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications