ஒண்ணு சொல்லுவேன்.. டி.ஆர்.பாலு கோபப்படக்கூடாது.. “இன்றைக்கும் கடன் காரர்”.. போட்டு உடைத்த ஸ்டாலின்!
சென்னை : "என்னுடைய ரூ.12,000 காருக்கு ரூ.100 மட்டும் அட்வான்ஸ் கொடுத்து என்னிடமிருந்து காரை வாங்கினார் டி.ஆர்.பாலு. அதன்பின் சில தவணைகளாக ரூ. 2000 வரை கொடுத்திருப்பார். மீதி பணத்தை இன்றுவரை கொடுக்கவில்லை. இன்றைக்கும் அவர் எனக்கு கடன்காரர் தான்" என டி.ஆர்.பாலு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகைச்சுவையாகப் பேசியுள்ளார்.
தி.மு.க பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு, தன்னுடைய வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை தொகுத்து 'பாதை மாறாப் பயணம்' என்ற தலைப்பில் சுயசரிதையாக எழுதி உள்ளார்.
இந்த நூலை வெளியிட்டுப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 17 வயதில் தொடங்கி 80 வயதை கடந்தும் ஒரே கட்சி ஒரே கொடி என்று டி.ஆர்.பாலு பயணிப்பதாக புகழாரம் சூட்டினார்.

டி.ஆர்.பாலு சுயசரிதை
திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு எழுதிய 'பாதை மாறாப் பயணம்' என்ற சுயசரிதை நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நூலை வெளியிட்டார். நூலின் முதல் பாகத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார். நூலின் இரண்டாம் பாகத்தை கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிறையில் ஒன்றாக
பின்னர் எம்.பி. டி.ஆர்.பாலு குறித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல சுவையான சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டார். முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "17 வயதில் தீவிர அரசியலில் நுழைந்த டி.ஆர்.பாலு, 80 வயது வரை ஒரே கொடி, ஒரே இயக்கம், ஒரே தலைமை என்ற கொள்கைப் பிடிப்போடு உள்ளார். நாங்கள் சிறையிலும் ஒன்றாகத் தான் தங்கி இருந்தோம். சிறையில் அண்ணா, கருணாநிதி பிறந்தநாள், மும்பெரும் விழா, பொங்கல் பண்டிகை, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்டவற்றை நடத்தி உள்ளோம்.

என் காரை வாங்கினார்
இந்நேரத்தில் வெளிப்படையாக ஒன்றைக் கூற விரும்புகிறேன். பாலு கோபப்படக் கூடாது. நான் ரூ.5000 கொடுத்து கார் ஒன்று வாங்கினேன். அப்போது ரூ.5,000 பெரிய தொகை தான். அந்த கார் வாங்கி சில நாட்களில் விபத்து ஏற்பட்டது. ரூ.5,000 கார் வாங்கி ரூ.7,000 செலவு செய்தேன். அதனால் காரை விற்று விடலாம் என நினைத்தேன். அந்த காரை நான் வாங்கிக் கொள்கிறேன் என்று பாலு சொன்னார். லாபம் வேண்டாம். அசல் மட்டும் போதும் என்று கூறி காரை அவருக்கு விற்றேன்.

கடன்காரர்
ரூ.12,000 கொடுத்தால் போதும் என்று சொன்னேன். அவர் ரூ. 100 அட்வான்ஸ் கொடுத்தார். அவ்வளவு தான் அவர் அதை மறந்துவிட்டார். 2 மாதம் கழித்து மீண்டும் ஒரு ரூ.100 கொடுத்தார். மொத்தம் இதுவரை ரூ. 2000 வரை கொடுத்திருப்பார். ஆகவே இன்றைக்கும் எனக்கு அவர் கடன்காரர் ஆகத்தான் இருக்கிறார். என்னை விட அவருக்கு 10 வயசு அதிகம். ஆனால், நாங்க எங்களுக்குள் வாயா போயா என்று தான் பேசிக்கொள்வோம். அந்தளவுக்கு எங்கள் நட்பு." என நெகிழ்ச்சியாகப் பேசினார்.

பாலுவுடன் இருந்ததுதான் அதிகம்
மேலும், "நான் வீட்டில் இருந்ததைவிட டி.ஆர்.பாலு அலுவலகத்தில் இருந்ததுதான் அதிகம். முதன்முறையாக 'இளந்தென்றல்' என்ற பட்டத்தை எனக்கு சூட்டியவர் டி.ஆர்.பாலு. கொள்கைப் பிடிப்புக்கு எடுத்துக்காட்டு டி.ஆர்.பாலு. மிசா காலத்தில் டி.ஆர்.பாலுவுக்கும் எனக்கும் இடையேயான நட்பு நெருக்கமானது. பாலு அண்ணா கலைக்கழகம் என்ற அமைப்பில் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்திவந்தார். அதுதான் எனக்கு பேச்சு பயிற்சிக் களமாக அமைந்தது. சேது சமுத்திர திட்டத்திற்கு நிதி ஒதுக்க உதவியாக இருந்தவர் டி.ஆர்.பாலு. அவர் 27 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 3 முறை ஒன்றிய அமைச்சராகவும் இருந்துள்ளார். இப்போதுகூட அவரது நடை, உடை மத்திய அமைச்சர் போன்றுதான் இருக்கும்" எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications