இந்திய துறைமுகங்கள் மசோதா.. மாநில உரிமைகளை பாதிக்கிறது.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
சென்னை: இந்திய துறைமுக மசோதா 2022ல் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் பிரிவுகளை நீக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் 12 பெரிய துறைமுகங்களும், சுமார் 200 சிறிய துறைமுகங்களும் உள்ளன. ஏறத்தாழ 95% அளவிலான அயல்நாட்டு வணிகத்தை இவை கையாளுகின்றன.
பெரிய துறைமுகங்கள் அனைத்தும் மத்திய அரசின் அதிகார வரம்புக்குள்ளும், சிறிய துறைமுகங்கள் அந்தந்த மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள்ளும் உள்ளன. ஆனால், சட்டம் மற்றும் நிர்வாக விஷயங்களில் மாநிலங்களை மீற மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.

கடந்த ஆண்டு மு.க.ஸ்டாலின் கடிதம்
1908ம் ஆண்டு இந்தியத் துறைமுகங்கள் சட்டம், அனைத்துத் துறைமுகங்களுக்கும் பொதுவானதாகும். அதை ரத்து செய்யவும், மாற்றவும் இந்தியத் துறைமுகங்கள் மசோதா 2022ஐ மத்திய அரசு முன்மொழிகிறது. இதற்கு ஏற்கனவே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக குஜராத், மகாராஷ்டிரம் , கோவா, கர்நாடகா , கேரளா , ஆந்திரா , ஒடிசா, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய 9 கடலோர மாநிலங்களின் முதலமைச்சர்களுக்குக் கடந்த ஆண்டு மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.

முதல்வர்களுக்கு கடிதம்
அந்தக் கடிதத்தில், இந்த மசோதாவால் மாநில அரசின் பல அதிகாரங்கள் ஒன்றிய அரசுக்குச் செல்லும் வகையில் அமைந்துள்ளது. ஏற்கெனவே உள்ள சட்டம், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. ஆனால் புதிய மசோதாவால் சிறு துறைமுகங்களை நிர்வகித்தலில் நீண்டகால பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இதன்மூலம் மாநிலத்தின் தன்னாட்சியை குறைப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

பிரதமருக்கு கடிதம்
இந்த நிலையில் துறைமுகங்கள் வரைவு மசோதா 2022ல் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், குறிப்பாக இந்த மசோதாவானது கடலோர மாநிலங்களின் உரிமையை பாதிப்பதாகவும், துறைமுகங்களின் எதிர்கால வளர்ச்சியை தடுப்பதாகவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களின் உரிமைகள்
அதேபோல் மாநிலங்களின் உரிமையை பாதிக்கக்கூடிய வகையில் வரைவுச்சட்டத்தில் இடம்பெற்றுள்ள பிரிவுகளை அகற்றவேண்டும் என்று கூறியுள்ளார். இதுமட்டுமல்லாமல், தனியாரின் பங்களிப்பு காரணமாக மாநில அரசுகளுக்கு கிடைக்கக்கூடிய வருவாய் தனியாருக்கு செல்ல வாய்ப்புள்ளதால், இது தொடர்பான பிரிவுகளை நீக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

திருத்தங்கள் தேவை
இந்த வரைவு மசோதாவில் இடம்பெற்றுள்ள அதிகாரங்களை தனியாருக்கு கொடுக்காமல் மாநில அரசுகளுக்கு பலன்கள் கிடைக்கும் வகையில் திருத்தங்கள் செய்யவேண்டும் என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications