மழையோடு வரும் அக்டோபர்.. வெள்ளத்தை தவிர்க்க என்ன செய்வது? இன்று ஆலோசிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: வரும் அக்டோபர் முதல் வாரம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் மழையை எதிர்கொள்வது மற்றும் வெள்ள பாதிப்புகளை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மே, ஜூன் மாதங்களில் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் மாதம் வட கிழக்கு பருவமழையும் கொட்டித்தீர்ப்பது வழக்கம்.
தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களிலும், வட கிழக்கு பருவமழை சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் அதிகம் பொழியும்.

அக்டோபர் முதல்
கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை காலத்தில் பெய்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பி வழிகின்றன. தற்போது தென்மேற்குப் பருவமழை காலம் முடிந்து வட கிழக்கு பருவமழை காலம் தொடங்க இருக்கிறது. வரும் அக்டோபர் மாதம் முதல் வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று கூறப்படுகிறது.

பெரு வெள்ளம்
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த காலங்களில் பெரு வெள்ளங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. அதேபோல் மோசமான புயல்களும் தாக்கியுள்ளன. கடந்த ஆண்டும் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்து மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர்.

அரசு நடவடிக்கை
இந்த ஆண்டு வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்கூட்டியே ஏரிகள், நீர்நிலைகள், நீர்வழித் தடங்கள், ஆறுகளை தூர்வார அரசு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது. அத்துடன் புதிய வடிகால்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த முறை மழைநீர் வீணாகாமல் சேமிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான வழிமுறைகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி இருந்தது.

முதலமைச்சர் கூட்டம்
இந்த நிலையில் இன்று காலை 10:30 மணியளவில் மழையை எதிர்கொள்வது, வெள்ள பாதிப்புகளை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார். இதில் மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் துறை செயலாளர்கள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications