தகுதியான விண்ணப்பங்களை வங்கிகள் உதாசீனப்படுத்தக் கூடாது... கடன் தர முன்வர வேண்டும் -முதலமைச்சர்
சென்னை: தகுதியான விண்ணப்பங்களை உதாசீனப்படுத்தாமல் கடன் கொடுக்க முன்வர வேண்டும் என சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், அனைத்து வங்கிகளும் சமுதாயத்தில் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு கல்விக் கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மாநில வங்கியாளர்கள் குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது;
தமிழ்நாடு அரசு வங்கிக் கடன் அடிப்படையில் மூன்று சுயவேலைவாய்ப்பு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சமீப ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள பல்வேறு வங்கிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட 1,37,429 விண்ணப்பங்களில், இதுவரை 35.67 விழுக்காடு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டது சிறுகுறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆகும். எனவே அதனை மீட்டெடுப்பது அரசின் முக்கியமான இலக்காக அமைந்திருக்கிறது. எனவே அரசின் இரண்டு திட்டங்களையும் வங்கிகள் முழு மனதுடன் ஆதரிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
மாணவர்களுக்குத் தரமான உயர்கல்வி கிடைப்பதை அரசு உறுதி செய்துள்ளது. அந்தக் கல்வியை அடையப் பணம் தடையாக இருக்கக் கூடாது. எனவே கல்விக் கடன்களை வழங்குவதன் மூலம் இந்த நோக்கத்தை மேம்படுத்துவதில் வங்கிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. அனைத்து வங்கிகளும் ஏழை மக்களுக்கு கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
விவசாயிகளுக்குத் தேவையானதைச் செய்து கொடுக்கும் கடமை அரசுக்கும் இருக்கிறது, ஏன் உங்களைப் போன்ற வங்கிகளுக்கும் இருக்கிறது. கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதேபோல் அனைத்து வங்கிகளும் செயல்பட வேண்டும்.
மீன்பிடித் தொழிலை நம்பி லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். இன்று மீன்பிடித் தொழில் நவீனமாகி வருகிறது. ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தியாக வேண்டும். இதனை வாங்குவதற்கு வங்கியாளர்கள் முடிந்த அளவிற்கு உதவிகளைச் செய்திட வேண்டும்.
திருமணத்தை மீறிய உறவு...கல்லூரி துணை முதல்வர் கடத்தல் - திமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது
கொரோனா தொற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கும் வரவிருக்கும் நாட்களில் நமக்கு ஒரு பெரிய சவால் உள்ளது. ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அரசுடன் வங்கிகள் கைகோர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், இந்த சந்திப்பு மாநிலத்தின் வளர்ச்சியில் அரசாங்கத்திற்கும் வங்கிகளுக்கும் இடையிலான கூட்டுறவு உறவின் தொடக்கமாக இருக்கும்.