பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்! பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும் முதல்வர்!
சென்னை: பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் நோக்கில் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு மணல் சிற்பத்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த "பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழி" விழிப்புணர்வு பதாகையில் முதல்வர் கையெழுத்திட்டார்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

குடும்ப வன்முறை
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்திடவும், பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், தமிழ்நாடு அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்ட "பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்" என்பது குறித்த மணல் சிற்பத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

181 மகளிர் உதவி மையம்
தமிழ்நாடு அரசின் "181 மகளிர் உதவி மையம்" பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் ரகசிய சேவை மையம் ஆகும். இதன்மூலம் குடும்ப பிரச்னை உள்ளிட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல்துறை, மருத்துவத்துறை, சட்டஉதவி, மனநல ஆலோசனை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கப்படுகின்றன.

அரசு வழங்கும் உதவிகள்
181 இலவச தொலைபேசி எண், மின்னஞ்சல், ஆன்லைன் உரையாடல் போன்றவை மூலமாக உதவி மையத்தை நாடும் வசதி உள்ளது. மேலும், பெண்களுக்காக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த விவரங்களையும், குடும்ப வன்முறை மற்றும் இதர வகை கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் குறித்தும் கேட்டறியலாம்.

பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழி
பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை, மெரினா கடற்கரையில் தமிழ்நாடு அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட மணல் சிற்பத்தை மாண்புமிகு முதலமைச்சர் பார்வையிட்டு, "பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்திடுவோம்! பெண்களுக்கான இடர் இல்லா சமுதாயத்தை உருவாக்கிடுவோம்! பெண்களின் பாதுகாப்பிற்காக அனைவரும் உறுதியேற்போம்!" என்ற "பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழி" விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டார்.












Click it and Unblock the Notifications