"திராவிட இயக்கத்தை.. எந்த கொம்பனாலும் தொட்டு கூட பார்க்க முடியாது.." முழங்கிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 90ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் அவரை புகழ்ந்து பேசினார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 90ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் என பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கி.வீரமணி குறித்தும் அவர் ஆற்றிய சேவைகள் குறித்தும் பேசினர்.
அதிமுகவை பிளவுபடுத்தி எதிர்க்கட்சி இடத்துக்கு பாஜக.. கே.என்.நேரு கருத்துக்கு வீரமணி புல் சப்போர்ட்!
முதல்வர் ஸ்டாலின்
இதில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டமைப்பு வழங்கும் சமூக நீதிக்கான கி.வீரமணி விருது இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசத் தொடங்கிய முதல்வர் ஸ்டாலின், பாரதிதாசனின் பாடல் வரிகளைக் குறிப்பிட்டு தனது உரையைத் தொடங்கினார். சமூக நீதிக்கான கி.வீரமணி விருதுக்குத் தன்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றியையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
மிசா
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ""தன் உயிரையும் காத்து எனது உயிரையும் காத்த கருப்புச் சட்டைக்காரர் தான் ஆசிரியர் வீரமணி. ஆசிரியரின் 90வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய 100வது பிறந்த நாளையும் கொண்டாடுவோம். மிசா சமயத்தில் என் மீது விழுந்த அடிகளைத் தாங்கியவர் சிட்டிபாபு மட்டுமில்லை ஆசிரியர் வீரமணியும் தான்.
தைரியம் கொடுத்தவர்
எனக்கு அப்போது மன தைரியத்தைக் கொடுத்தவர் ஆசிரியர் வீரமணியும் தான். திமுக மீது அரசியல் எதிரிகள் முன்வைக்கும் விமர்சனங்களைத் தடுக்கும் கேடயமாக உள்ளவர் வீரமணி.. கருணாநிதி மறைவுக்குப் பிறகு எனக்குத் தைரியத்தையும் தெம்பையும் அளித்தவர் வீரமணி. 1945 மட்டுமல்ல 2022ம் ஆண்டிலும் போர்க்களம் நோக்கிச் செல்ல தயாராக இருப்பவர்தான் ஆசிரியர் வீரமணி. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை; இதற்கும் முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்தவர் வீரமணி..
போராட தயார்
எப்போதும் போராட்ட களம் நோக்கிச் செல்ல தயாராக இருப்பவர் வீரமணி. பிறந்த நாளை கூட சிறைச்சாலையில் கொண்டாட அவர் தயாராகவே இருந்தார். தினந்தோறும் ஆசிரியர் வீரமணி அறிக்கை வெளியிட்டு வருகிறார். அவரது அறிக்கையை வைத்துத்தான், நாங்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது. அரசு குறித்து அவதூறு பிரசாரங்கள் முன்வைக்கப்படும் போது அதற்கு முதல் ஆளாகப் பதில் அளிப்பவரும் ஆசிரியர் வீரமணி தன்.
தொட்டு கூட பார்க்க முடியாது
குடும்பம் குடும்பமாக இயக்கப்படுத்தியதால் இது குடும்ப இயக்கம் என்றே சொல்லலாம்.. கொள்கை ஒரு பக்கம் என்றாலும் பாசமும் அன்பும் தான் திராவிட இயக்கித்தின் அடிக்கட்டுமானம்.. எந்த கொம்பனாலும் திராவிட இயக்கத்தைத் தொட்டுக் கூட பார்க்க முடியவில்லை; இனியும் முடியாது.. திராவிட இயக்கம் என்பது கட்சியல்ல: கொள்கை உணர்வு, அது வளர்ந்து கொண்டே இருக்கும்" என்று அவர் பேசினார்.